Monday 6 June 2011

"Then drop "I" and "want"! "


ஸ்ரீ ரமண மஹரிஷி ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் வாழ்ந்ததால் அவரது பள்ளிப் படிப்பில் ஆங்கிலமும் உண்டு. எனவே அவரால் ஆங்கிலம் புரிந்து கொள்ளவும் சிறிது பேசவும் முடியும்.

ஒரு முறை ஓர் ஆங்கிலேய கனவான் ஸ்ரீரமணரிடம் வந்தார்.அந்த ஆங்கிலேயர் சற்றே பரபரப்பாகக் காணப்பட்டார்.ஸ்ரீ ரமணர் அவரைப் பார்த்து ஆங்கிலத்தில்,

"What do you want?" என்று கேட்டார்.

அந்த ஆங்கில கனவான்,"I want peace" என்று மறு மொழி சொன்னார்.

"Then drop "I" and "want"! "  என்றார் மஹரிஷி.

அந்த கனவான் சொன்ன மூன்று சொற்களில் முதல் இரண்டை விலக்கிவிட்டால் மீதமுள்ளது அமைதிதானே! நான் என்ற அகங்காரத்தையும், பார்த்த பொருட்களையெல்லாம் அடைய ஆசைப்படுதலும் தான் அமைதி
இன்மைக்குக் காரணம்.  அந்த இரண்டையும் தியாகம் செய்துவிட்டால் அமைதி தானகக்கிட்டும் என்பதை இரத்தினச் சுருக்கமாகக் கூறினார் மஹரிஷி!
‍‍‍‍‍‍‍‍‍‍‍===================================================================
பி கு: நானும் என்னவரும் இலண்டன் செல்ல இருப்பதால், அந்நாட்டு நுழைவு அனுமதி= விசா= போன்றவற்றிற்காக அலைந்து கொண்டுள்ளோம்.எனவே பதிவு இடுவதில் தாமதம் பொறுத்தருள்க.


Wednesday 25 May 2011

ஆனந்த ஆஸ்ரமம்


கேரளாவில் கஞ்சன்காட் என்ற இடத்தில் ஆனந்த ஆஸ்ரமம் இருக்கிறது. இதனை நிறுவியவர் சுவாமி ராமதாஸ் அவர்கள்.

1884ல் பிறந்த சுவாமி ராமதாஸ் திருவண்ணாமலையில் ஸ்ரீரமண மஹரிஷியைத் தரிசித்து, ஒரு குகையில் 21 நாள் தவம் செய்து, தன்னைத்தான் உணர்ந்தவர். அதுவரை ஊரெல்லாம் சுற்றி வந்தவர் கஞ்சன்காட்டில் அமைதியாக வாழ்ந்தார். அவருடைய சீடர்களில் முதன்மையானவர் தவத்திரு கிருஷ்ணாபாய் அம்மையார்.

கிருஷ்ணாபாய் அம்மையார் அன்பே உருவானவர். அவருக்கு யாரையும் கடிந்து பேசத் தெரியாது.உலகியலே தெரியாது. பிறர் துன்பம் காணப் பொறாதவர்.

ஒரு சமயம் ஆஸ்ரமப் பணியாளர் ஒருவர் சோக முகத்துடன் விளங்குவதைக் கண்டார் அம்மையார்.

அந்தப் பணியாளரை அழைத்து "உங்களுக்கு என்னப்பா சோகம்?" என்று வினவினார்.

"அம்மா! வருமானம் போதவில்லை. குடும்பம் பெரிதாகிவிட்டது. கடன் கொடுத்தவர்கள் நச்சரிப்புத் தாங்க‌வில்லை..."

"அப்படியா அப்பா!குடும்ப வருமானம் வளர என்ன‌ வழி என்று யோசித்தீர்களா?"

"ஆம், தாயே! ஒரு பால் மாடு இருந்தால் பால் கறந்து விற்றுக் கடனை அடைத்துவிடுவேன்"

"சரி ஆசிரமக் கொட்டிலில் இருந்து ஒரு நல்ல பால் பசுவை ஓட்டிச் செல்லலாமே"

மகிழ்ந்த பணியாளர் மாடு கன்றைத் தன் இல்லத்திற்கு ஓட்டிச்சென்று விட்டார்.

மறு நாளும் பணியாள் முகத்தில் மகிழ்ச்சியில்லை. வழக்கம் போல அன்னை விசாரித்தார்.

"மாடும் கன்றும் மழை காற்றுக்கு ஒதுங்க முடியாமலும் வெய்யிலில் காய்ந்து கொண்டும் நிற்கின்றன"

"சரி. வேண்டிய மூங்கிலும், தென்னை ஓலையும் எடுத்துச் சென்று கூரை அமைக்கலாமே" என்றார் அன்னையார்.

அப்படியே செய்தார் பணியாளர்.

மீண்டும் பணியாளர் முகத்தில் வாட்ட‌ம்.

"ஏன் வாட்டமாய் இருக்கிறீர்கள்?"என்று அம்மையார் கேட்டார்.

"வைக்கோலும் பருத்திக்கொட்டை தீவனம் வாங்கக் காசுக்கு எங்கே போவேன்?"  என்றார் பணியாளர்.

"சரி, நமது கோசாலையில் இருந்து வைக்கோலும், தீவனமும் எடுத்துச்சென்று
மாட்டுக்குப் போடும்" என்றார் அன்னை.

மகிழ்ச்சியுடன் பணியாளர் எடுத்துச் சென்றார்.

மறுநாளும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டார் பணியாளர்.

காரணம் கேட்ட அன்னையிடம் கூறுவார்." பாலை சந்தைக்குக் கொண்டு சென்றால் குறைந்த விலைக்குக் கேட்கிறார்கள்".

"அப்படியா? அந்த மாட்டுப் பாலை ஆஸ்ரமத்திற்கே விலைக்குக் கொடும்"'.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சீடர் ஒருவர் அன்னையைக் கேட்டார்.
"இப்படி எல்லாவற்றையும் கொடுத்துப் பின்னர் காசு கொடுத்துப் பால்
வாங்குவதற்கு பதில் நேர‌டியாகவே இந்தப் பணத்தை கொடுத்து உதவியிருக்கலாமே!"

அன்னை அன்புடன் கூறினார்:

"நீங்கள் சொல்வது போல் செய்திருந்தால் நமக்கு அக்ங்காரம் வந்திருக்கும். அவருக்குத் தாழ்வுணர்ச்சி வந்திருக்கும்.அவருக்குத் தானே சம்பாத்தித்துக் கடனை அடைத்தோம் என்ற திருப்தி வரவேண்டும்.எனவே தான் அப்படிச் செய்தேன்"

மகான்களின் உள்ளம் எப்படி செயல் படும் என்பது நமக்கு எப்படித் தெரியும்?

வாழ்க பப்பா ராமதாஸ்ஜி நாமம்!  வாழ்க அன்னை கிருஷ்ணாபாய்!  

Sunday 22 May 2011

தூய அன்னை ஸ்ரீசாரதாமணி அம்மையார்


தூய அன்னை ஸ்ரீசாரதாமணி அம்மையார் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு ஏற்ற மனைவி மட்டும் அல்ல;பரமஹம்சரின் முதல் சீடரும் ஆவார்.

அன்னையைப்பற்றி ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்லும் போது நெகிழ்ந்து விடுவார்.

"அன்னை மட்டும் சாதாரணப் பெண்களைப் போல உலகப்பொருட்களுக்காக என்னை நச்சரித்து இருந்தால் இந்த ராமகிருஷ்ணன் உங்க‌ளுக்குக் கிடைத்திருக்க மாட்டான்.இவனும் ஒரு பணம் சமாபதிக்கும் யந்திரம்போல ஆகி, ஒன்றுக்கும் உதவாதவனாகப் போயிருப்பான்.அன்னையின் தியாகமே என்னை மனித நிலையில் இருந்து தெய்வத்தை நோக்கி உயர்த்தியது" என்பார் குருதேவர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் முதலில் 6 வயதே ஆன குழந்தை சாரதையை மணந்து கொண்டார்.அன்னை பூப்பெய்தி அவரிடம் வந்து சேர்வதற்குள் ச‌ன்னியாசத்தை
ஏற்றுக் கொண்டுவிட்டார்.

"நான் சன்னியாசத்தைக் கைவிட்டு உன்னுடன் சாதாரணக் கணவன் போல வாழட்டுமா? அப்போது நமக்கு ஒரு சில குழந்தைகளே இருக்கும். ஆனால் நாம் ஆன்மீகத்தில் ஈடுப‌ட்டு நம‌க்கென்று குழந்தை குட்டிகளைப் பெறாமல் இருப்போமாயின், இந்த உலகமே நம்மை தாய் தந்தையாக ஏற்றுப் போற்றும்.
எது வேண்டும் சொல்லுங்கள் தாயே!"என்றார் பரமஹம்சர்.

அன்னை சற்றும் தயங்காமல், "நான் லோக மாதாவாகவே இருக்க விரும்புகிறேன்" என்றார்.இதைச்சொல்லும் போது அன்னைக்கு 15,16 வயது இருக்கலாம்.

"அவள் மட்டும் என்னைத் தூண்டுவது போல நடந்திருந்தால், என் சன்னியாசம் எல்லாம் வெறும் கேலிக் கூத்தாக ஆகியிருக்கும்" என்பார் பரமஹம்சர்.

அவ்ர்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது.

தன்னுடன் எந்த இடத்திற்கு அன்னை வரலாம், வரக்கூடாது என்பதினைப் பரமஹம்சர் சொல்லும் சொற்களை வைத்தே அன்னை புரிந்து கொள்வாராம்

"நீங்களும் என்னுடன் வாருங்கள்" என்று பரமஹம்சர் சொன்னால் அதனை
அன்னை ஏற்று அவருடன் செல்வாராம்.

"என்ன, நீங்களும் எங்களுடன் வருகிறீர்கள்தானே?" என்று பரமஹம்சர் கேட்டால் அன்னை குருதேவர் தான் வருவதை விரும்பவில்லை என்பதைப்புரிந்து கொண்டு விலகிவிடுவாராம்.

துறவியர்களுக்குத் துறவியாக வாழ்ந்து காண்பித்தார்கள்.

கிரஹஸ்தர்களுக்கு இல்லற‌த்தாரைப் போலவே வாழ்ந்து காண்பித்தார்கள்.

இந்த உன்னத தம்பதிகளின் பாதம் பணிவோம்.

Thursday 19 May 2011

மனிதனின் உணவு எது?சைவமா அசைவமா?



இந்தக் கேள்வி நீண்ட விவாதத்தைத் தோற்றுவித்துள்ளது. வலைதளங்கள் பலவற்றிலும் இந்த விவாதம் நடந்து வருகின்றது. எந்த ஒரு முடிவும் எட்டப்படாத ஒரு தலைப்பு இது.

மனிதன் அசைவம் ,சைவம் இரண்டையுமே சாப்பிடும்படிக்கு உடல் நிலை அமைப்புப் பெற்றுள்ளான்.எனவே எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்பது ஒரு சரியான வாதமே.

மாடு, ஆடு, மான்,குதிரை யானை, ஏன் நீர்யானை, காண்டாமிருகம் எல்லாமும் சைவத்தையே உண்கின்றன. அசைவம் சாப்பிடும் சிங்கம் புலி, போன்றவை உணவுக்காக அசைவ உணவு சாப்பிடும் மிருகஙளைக் கொல்வதில்லை. தன்னுடைய வாழ்விடங்களுக்கான சண்டையிட்டு
மற்ற தன் இன மிருகங்களைக் கொல்லுமே தவிர, உணவுக்காக ஒரு அசைவப் பிராணி மற்றொரு அசைவப் பிராணியைக் கொல்லுவதில்லை.

மிருக இனத்தில் அதன் அதனுடைய இயற்கையான உணவு எது என்பதை
கடவுள் அல்லது இயற்கையே அவற்றுக்கு அறிவுறுத்தி உள்ளது.
மாடு தன் உணவு புல் என்பதையும்,ஆடு தன் உணவு இலை தழை என்பதையும்,யானை கரும்பு, மூங்கில்,தென்னைமட்டை என்பதையும் நனகு அறிந்துள்ளன‌. அதுபோலவே சிங்கம்,புலி தஙளுடைய உணவு மான், ஆடு மாடு என்பதை நன்கு அறிந்துள்ளன.

அதுபோல மனிதன் தன் உணவு இயற்கையாக இதுதான் என்பதை அறிந்துள்ளானா?எதை வேண்டுமானாலும் மனிதக்குடல் ஏற்றுக்கொள்கிறது
என்பதால் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாமா?

எல்லோருமே சைவமாக மாறிவிட்டால் சைவ உணவுக்குத் தட்டுப்பாடு வந்துவிடும்.மிருகங்க‌ள் கொல்லப்படாவிட்டால் அவற்றின் எண்ணிக்கை அதிகமாகிவிடும்.தோலுக்காகக் கொல்லப்படும் மிருகங்கள்,தோலை எடுத்தபின்னரே உணவாகப் பயன் படுகிறது.இவையெல்லாம் அசைவக்காரர்ர்கள் முன்னிறுத்தும் சில வாதங்கள்.இவை யாவற்றுக்கும் தக்க பதில் நம்மிடம் உண்டு.

நம் கேள்வி ஒன்றே ஒன்றுதான்.மனிதனின் இயற்கை உணவு எது?

ஏனைய மிருகங்கள் உண‌வை சமைத்து உண்பதில்லை.அதுபோலவே எதையெல்லாம் மனிதனும் சமைக்காமல் உண்ண முடியுமோ அவைதான் மனிதனுடைய இயற்கை உணவு. எல்லாப் பழங்களையும் மனிதன் சமைக்காமல் சாப்பிடலாம். இயற்கையே நமக்காகப் பழங்களை சூரிய ஒளியில் சமைத்துக் கொடுத்து விட்டது.அதுபோலவே பல காய்களையும் நாம் சமைக்காமல் அப்படியே சாப்பிடலாம்.தேங்காய் சமைக்காமல் உண்ணலாம்.
எனவே எதை நாம் சமைக்காமல் சாப்பிட முடியுமோ அதுதான் நமது இயற்கை உணவு.

இந்த வாதத்தின் படி எந்த அசைவ உணவையும் சமைக்காமல் மசாலா சேர்க்காமல் உண்ண முடியாது.எனவே அசைவம் மனிதனின் இயற்கைக்கு எதிரானது. சைவமே மனிதனின் இயற்கையான உணவு என்பதே உண்மை.



Tuesday 17 May 2011

அமாவாசை அன்று வந்த நிலா!!



பத்திரிகை ஆசிரியர் பணி என்பது எளிதானது அல்ல. எழுத்தாளர்கள்
அனைவருமே உணர்ச்சி வயப்படக் கூடியவர்களே.ஏதோ ஓர் உணர்ச்சி எழுத்தாளர்களை வந்து கவ்வும் போது எழுதத் துணிந்து விடுவாகள்.சமூகத்தில் தன் எழுத்தினால் என்ன பின் விளைவுகள் தோன்றும் என்றெல்லாம் யோசிக்காமல் எழுதிவிடுவார்கள்.அப்படியெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தால் கணக்குத்தான் வருமே தவிர‌, இலக்கியம் வராது.

ஓர் இதழ் ஆசிரியரின் பணியே இலக்கியத்தை சிதைத்து விடாமல்,
எழுத்தாளரின் படைப்பை செப்பம் செய்து,முன் பின் விளைவுகளைப் பற்றி ஆய்ந்து,காய்தல் உவத்தல் இல்லாமல், நடுவுநிலையில் நின்று ஆக்கத்தை எல்லோருக்கும் மகிழ்ச்சி தோன்றும் வண்ணம் வெளியிடுதலே ஆகும்.

எழுத்துப்பிழை, கருத்துப்பிழை,இலக்கணப்பிழை அனைத்தையும் சரி செய்ய வேண்டியது ஆசிரியரின் பொறுப்புத்தான்.

தமிழ்த்தாத்தா உவேசா அவர்களின் மாணவரும், கலைமகள் மாத இதழின்   ஆசிரியருமான வாகீச கலாநிதி கி.வா.ஜகன்னாதன் அவர்கள்
சிறந்த தமிழறிஞர் மட்டும் அல்ல. நல்ல சொற்பொழிவாளர்.நல்ல எழுத்தாளர்.
முக்கியமாக நல்ல இதழ் ஆசிரியர்(எடிடர்)

கலைமகளில் ஸுபா என்ற ஓவியர் படம் வரைந்து கொடுத்து வந்தார்.ஒரு முறை கலைமகள் தீபாவளி மலருக்கு ஸுபா ஓவியம் வரைந்து கொடுத்தார். அது ஒரு சிறு கதைக்கான ஓவியம். கதைப்படி தலை தீபாவளிக்கு  மாப்பிள்ளை மனைவியின் பிறந்த‌கத்திற்கு வந்துள்ளார். இளம் தம்பதிகள் தனிமையில் வீட்டின் மொட்டை மாடிய்ல் சந்தித்துக் கொள்கிறார்கள். வீட்டின் கிணற்ற‌டி,தோட்டம், தென்னை மரம் என்று அழகாக ஓவியத்தை வரைந்து இருந்தார் ஸுபா.வானத்தில் முழுநிலவு, அந்த நிலவு அளித்த மயக்கத்தில் காதல் வயப்பட்டு ஆணும் பெண்ணும் மகிழ்வுடன் காண்பதாக ஓவியம் அருமையாக இருந்தது.

பலரும் அந்த ஓவியத்தைப் பார்த்துப் பாராட்டிவிட்டனர். உதவி ஆசிரியர்கள் எல்லோரும் பார்த்துப் பாராட்டி ஒப்புதல் அளித்த பின்னர் தலைமை ஆசிரியர் கிவாஜ அவர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது ஓவியம். அவர் பார்த்து ஒப்புதல்
அளித்தாலே பிரசுரம் செய்ய முடியும்.உயர்திரு கிவாஜ அவர்கள் ஓவியத்தை உற்று நோக்கினாராம்.ஓவியர் ஸுபாவிடம்," மாப்பிளை தீபாவளிக்கு அல்லவா மாமனார் இல்லத்துக்கு வந்திருக்கிறார்?" என்று கேட்டாராம்.

"ஆமாம்!"  

"அப்புறம் எப்படி முழு நிலவை இந்த ஓவியத்தில் காண்பித்தீர்?"

"ஏன்?அந்தக் காதல் சூழலுக்கு நிலவு நல்ல உதவிதானே?"

"காதலுக்குச் சரி!தீபாவளிக்குப்பொருத்தம் இல்லயே!"

"ஏன் எப்படி?"


"தீபாவளி அமாவாசை அன்று அல்லாவா கொண்டாடப்படும். அன்று எப்படி முழு நிலவு இருக்கும்?"

ஓவியர் ஸுபா ஆசிரியர் கிவாஜ அவர்களின் கூர் நோக்கைக் கண்டு வியந்தாராம்.

ஆம்! கூர் நோக்கு உள்ளவர்களே இதழ் ஆசிரியப் பணி செய்ய முடியும். அதற்கு நல்ல எடுத்துக்காட்டு வாகீச கலாநிதி உயர்திரு கிவாஜ அவர்கள்.

Saturday 14 May 2011

முதலையிடமிருந்து தப்பிய விவேகானந்தர்!!



நம் நாட்டிற்கு வந்த ஐரோப்பியர்கள் இங்குள்ள சமூக அமைப்புக் காரணமாகவே இந்த மக்க‌ள் எந்தத் துன்பத்தையும் தாங்கிக் கொள்கின்றனர்.அதனால் சமூகம் கட்டுக் கோப்பை இழக்காமல் உள்ளது. இவர்களைப் பிரிக்க ஒரே வழி இவர்களுடைய சமூக வழிமுறைகளையும், பழக்க வழக்கஙளையும் இழிவாகப் பேசி இந்த மக்களையே தங்களுடைய பல்லாண்டுகளாகப் புழக்கத்தில் இருக்கும் எல்லா செயல்பாடுகளின் மீதும் அவநம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பிராச்சாரத்தைச் செய்தார்கள்.

"இந்திய மக்கள் அனைவருமே பாம்பு வழிபாட்டுக்காரர்கள்;30000 உருவங்களை வைத்து வழிபாடு செய்பவர்கள்;பிறந்த குழந்தைகளை கங்கையில் முதலைக்குப் போட்டு விடுவார்கள்; அல்லது ஜகன்னாதர் கோவில் ரத யாத்திரையில் குழந்தைகளை தேர்ச் சக்கரத்தில் பலி கொடுப்பார்கள்....." இப்படிப் பொய்யும்,மிகைப் படுத்தலுமான பிரசாரத்தை செய்தார்கள்.

பல வெளி நாடுகளிலும் இந்தப் பிரசாரம் செய்யப்ப‌ட்டு உலக நாடுகளில் உள்ள மக்கள் அனைவரும் இந்தியா பாம்புப் பிடாரர்களையும்,
காட்டுமிராண்டிகளையும் கொண்ட நாடு; இந்தியர்களை நாகரீகப்படுத்தும் அரும் பணியை ஐரோப்பியர்களும்,கிறிஸ்துவ மிஷனரிகளும் செய்து வருகிறார்கள் என்று நம்பும்படிக்கு அவர்களுடைய பிரச்சாரம் இருந்தது.


இப்படிப்பட்ட சூழலில்தான் சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்றார்.
உலக மதப் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டதால் அவருடைய புகழ் எங்கும் பரவியது.

அமெரிக்காவில் அவர் சென்ற இடத்தில் எல்லாம் அவ‌ரிடம் சாதாரண மக்கள்,
"உங்கள் நாட்டில் குழந்தைகளை முதலைக்குப் போட்டு விடுவீர்களாமே.."
என்று கேட்பார்களாம்.

சுவாமி விவேகானந்தர், புன்முறுவலுடன் சொல்வாராம்," ஆம்! என் தாயார் கூட என்னை முதலையிடம் போட்டு விட்டார்கள்! ஆனால் பாருங்கள் என் உடல் மிகப் பருமனாக இருந்ததால் முதலையால் விழுங்க முடியவில்லையாம். அதனால்தான் நான் உயிர் பிழைத்து உங்கள் முன்னால் நிற்கிறேன்"

இதைக் கேட்டுவிட்டு மக்கள் நகைத்து விட்டு தெளிவடைவார்களாம்.
   

Friday 13 May 2011

மாலை மாற்று==2



முன்பு ஒரு பதிவில் மலைமாற்றுப் பதிகத்தை கொடுத்து அதன் பொருளைக் கேட்டு இருந்தோம். அதற்கு 'சிவ‌யசிவ' வலைப்பூவின் ஆசிரியர்
உயர்திரு ஜானகிராமன் 
அவர்கள் 
அருள்கூர்ந்து விளக்கம் அளித்துள்ளார்கள்.
அவருக்கு அனுராதாவின் நன்றி. அனுராதா எல்லோருடமிருந்தும் தரமான கட்டுரைகள் ,கதைகள், கவிதைகள், நாடகங்களை எதிர் பார்க்கிறது.
=========================================================

''யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா

தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா பொலேமே

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ

நேணவரா விழயாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாய ரிளேதகவே யேழிசையாழவி ராவணனே

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா

வேரியுமேணவ காழியயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயழிகாவண மேயுரிவே

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயா தமிழாகரனே"


மேலே கண்டுள்ளது திருஞான சம்பந்த சுவாமிகள் எழுதிய மாலை மாற்றுப்
பதிகமாம்.

===========================================






சிவசிவ



மாலை மாற்று

திருஞானசம்பந்தர் அருளிச் செய்த மாலை மாற்று - என்னும்
திருப்பதிகத்திற்கான உரையை சிந்திப்பதற்கு முன்னர்
அப் பதிகத்திற்கன இலக்கண வரலாறு குறித்து சிந்திப்பது
அதன் பெருமையை மேலும் பறைசாற்றும்.

தமிழ் இலக்கணம் அக இலக்கணம், புற இலக்கணம் என
இரு வேறு கூறுகளை கொண்டிருந்தாலும், அவற்றில் மிக முக்கியமாக கருதப்படுவது,

எழுத்து இலக்கணம்,
சொல் இலக்கணம்,
பொருள் இலக்கணம்,
யாப்பு இலக்கணம்,
அணி இலக்கணம்,

என்னும் ஐந்து வகையான இலக்கணங்களாகும்.

இதில், திருஞானசம்பந்தர் அருளிச் செய்த மாலை மாற்று - என்னும் திருப்பதிகம் " அணி இலக்கணம் " என்னும் வகையை சார்ந்ததாகும.

இன்னும் சரியாகச் சொல்லப் போனால்,

இந்த அணி இலக்கணம் என்பது

" பொருள் அணி " மற்றும் " சொல் அணி " என இருவகைப்படும்

இவற்றில்

பொருள் அணி என்னும் இலக்கணம் - 100 வகைப்படும்.

சொல் அணி என்னும் இலக்கணம் - 2 வகைப்படும்.

இந்த சொல் அணியின் இரண்டு வகையாவன,

மடக்கு மற்றும் சித்திரக்கவி எனப்படும்.

ஆக,

திருஞானசம்பந்தர் அருளிச் செய்த மாலை மாற்று -
என்னும் திருப்பதிகம் " சொல் அணி இலக்கணத்தில் உள்ள சித்திரக் கவி " என்னும் வகையைச் சார்ந்ததாகும்.

இதில் என்ன சிறப்பு என்றால்,

தமிழ் கூறும் நல்லுலகில் இந்த இருவகையான
( மடக்கு மற்றும் சித்திரக் கவி )
இலக்கணப் பிரிவுகளையும் முதன் முதலில் தமிழுக்கு அறிமுகப் படுத்தியவர் என்னும் பெருமை திருஞானசம்பந்தரையே சாரும்.

இந்த மாலை மாற்று என்னும் திருப்பதிகம் - சித்திரக் கவி என்னும் வகையைச் சார்ந்தது என்று பார்த்தோம்.

சித்திரக் கவி என்றால் என்ன ?

கடுமையான சொல் ஆட்சிகளையுடைய பாடல்களுக்கு
சித்திரக் கவி என்று பெயர்.

சித்திரக் கவிக்கு - மிறைக் கவி என்றும் ஒரு பெயர் உண்டு.

இந்த சித்திரக் கவி என்னும் அமைப்பில் இலக்கிய இலக்கணத்தில் தலைசிறந்த அறிஞர்களால் மட்டுமே பாட முடியும் என்பதே இதன் தனிசிறப்பாகும்.

சித்திரக் கவி என்பதற்காக - பொருளற்ற வார்த்தைகளைப்
போட்டு எடக்கு மடக்காக "  பாடாமல் -
பொருள் பொதிந்து பாட வேண்டும் என்பதே
இதன் பெருமைய உணர்த்தும்.

அவ்வாறு மிக அரிய கருத்துகளை உள்ளடக்கிப் பாடப்பட்டதே 
" மாலை மாற்று " என்னும் திருப்பதிகமாகும்.

உவமையிலா கலைஞானமும் +
உணர்வரிய மெய்ஞ்ஞானமும் கைவரப்பெற்ற திருஞானசம்பந்தப் பெருமான்,

இது போல கிட்டத்தட்ட 15 வகையான சித்திரக் கவிகளை பாடியுள்ளார்.

அவை,

01.  மொழி மாற்றுப் பதிகம்
02.  மாலை மாற்று
03.  வழிமொழி
04.  மடக்கு
05.  ஏகபாதம்
06.  திரு இருக்குக் குறள்
07,  திரு எழு கூற்றிருக்கை
08.  ஈரடி
09.  ஈரடி மேல் வைப்பு
10.  நாலடி மேல் வைப்பு
11.  முடுகு இராகம்
12.  சக்கரமாற்று
13.  வழி முடக்கும் ஆவின் பாய்ச்சல்
( திருக்கோமூத்திரி அந்தாதி )
14 .  திருப் பல்பெயர் பத்து
15 .  வினா - உரை


இத்தகைய சிறப்புமிக்க சித்திரக் கவிகளுள் ஒன்றுதான் -
" மாலை மாற்று " என்னும் திருப்பதிகமாகும்.


மாலை மாற்று - என்றால் என்ன ?

ஒவ்வொரு அடியிலும்,

முதலிலிருந்து இறுதிவரை அமைந்த ஒரு பாடல் வரியை
இறுதியிலிருந்து முதல் எழுத்து வரை அப்படியே திருப்பிப் படித்தாலும் எந்த மாற்றமும் இல்லாமல் அமைந்த பாடல் வரிக்கு மாலை மாற்று என்று பெயர்.

எடுத்துக்காட்டாக பார்த்தோம் என்றால்,

விகடகவி
குடகு
தாத்தா
குருகு
தேருவருதே

இப்படி எப்படி படித்தாலும் பொருள் தரும் வார்த்தைகள் நிறைய இருக்கின்றன.

ஆனால் இப்படி எளிமையாக ஒரு சொல்லில் அமையும் ஒரு விசயத்தை - ஒரு பதிகமாகவே பாடியிருக்கிறார் என்றால் திருஞானசம்பந்தரது பெருமையை என்ன வென்று சொல்வது ?


இப்பதிகத்திற்கான விளக்கத்தை பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும் - என்னும் பகுதியில் காணலாம்.

அதற்கான சுட்டி இங்கே...



திருச்சிற்றம்பலம்