Monday 6 June 2011

"Then drop "I" and "want"! "


ஸ்ரீ ரமண மஹரிஷி ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் வாழ்ந்ததால் அவரது பள்ளிப் படிப்பில் ஆங்கிலமும் உண்டு. எனவே அவரால் ஆங்கிலம் புரிந்து கொள்ளவும் சிறிது பேசவும் முடியும்.

ஒரு முறை ஓர் ஆங்கிலேய கனவான் ஸ்ரீரமணரிடம் வந்தார்.அந்த ஆங்கிலேயர் சற்றே பரபரப்பாகக் காணப்பட்டார்.ஸ்ரீ ரமணர் அவரைப் பார்த்து ஆங்கிலத்தில்,

"What do you want?" என்று கேட்டார்.

அந்த ஆங்கில கனவான்,"I want peace" என்று மறு மொழி சொன்னார்.

"Then drop "I" and "want"! "  என்றார் மஹரிஷி.

அந்த கனவான் சொன்ன மூன்று சொற்களில் முதல் இரண்டை விலக்கிவிட்டால் மீதமுள்ளது அமைதிதானே! நான் என்ற அகங்காரத்தையும், பார்த்த பொருட்களையெல்லாம் அடைய ஆசைப்படுதலும் தான் அமைதி
இன்மைக்குக் காரணம்.  அந்த இரண்டையும் தியாகம் செய்துவிட்டால் அமைதி தானகக்கிட்டும் என்பதை இரத்தினச் சுருக்கமாகக் கூறினார் மஹரிஷி!
‍‍‍‍‍‍‍‍‍‍‍===================================================================
பி கு: நானும் என்னவரும் இலண்டன் செல்ல இருப்பதால், அந்நாட்டு நுழைவு அனுமதி= விசா= போன்றவற்றிற்காக அலைந்து கொண்டுள்ளோம்.எனவே பதிவு இடுவதில் தாமதம் பொறுத்தருள்க.


Wednesday 25 May 2011

ஆனந்த ஆஸ்ரமம்


கேரளாவில் கஞ்சன்காட் என்ற இடத்தில் ஆனந்த ஆஸ்ரமம் இருக்கிறது. இதனை நிறுவியவர் சுவாமி ராமதாஸ் அவர்கள்.

1884ல் பிறந்த சுவாமி ராமதாஸ் திருவண்ணாமலையில் ஸ்ரீரமண மஹரிஷியைத் தரிசித்து, ஒரு குகையில் 21 நாள் தவம் செய்து, தன்னைத்தான் உணர்ந்தவர். அதுவரை ஊரெல்லாம் சுற்றி வந்தவர் கஞ்சன்காட்டில் அமைதியாக வாழ்ந்தார். அவருடைய சீடர்களில் முதன்மையானவர் தவத்திரு கிருஷ்ணாபாய் அம்மையார்.

கிருஷ்ணாபாய் அம்மையார் அன்பே உருவானவர். அவருக்கு யாரையும் கடிந்து பேசத் தெரியாது.உலகியலே தெரியாது. பிறர் துன்பம் காணப் பொறாதவர்.

ஒரு சமயம் ஆஸ்ரமப் பணியாளர் ஒருவர் சோக முகத்துடன் விளங்குவதைக் கண்டார் அம்மையார்.

அந்தப் பணியாளரை அழைத்து "உங்களுக்கு என்னப்பா சோகம்?" என்று வினவினார்.

"அம்மா! வருமானம் போதவில்லை. குடும்பம் பெரிதாகிவிட்டது. கடன் கொடுத்தவர்கள் நச்சரிப்புத் தாங்க‌வில்லை..."

"அப்படியா அப்பா!குடும்ப வருமானம் வளர என்ன‌ வழி என்று யோசித்தீர்களா?"

"ஆம், தாயே! ஒரு பால் மாடு இருந்தால் பால் கறந்து விற்றுக் கடனை அடைத்துவிடுவேன்"

"சரி ஆசிரமக் கொட்டிலில் இருந்து ஒரு நல்ல பால் பசுவை ஓட்டிச் செல்லலாமே"

மகிழ்ந்த பணியாளர் மாடு கன்றைத் தன் இல்லத்திற்கு ஓட்டிச்சென்று விட்டார்.

மறு நாளும் பணியாள் முகத்தில் மகிழ்ச்சியில்லை. வழக்கம் போல அன்னை விசாரித்தார்.

"மாடும் கன்றும் மழை காற்றுக்கு ஒதுங்க முடியாமலும் வெய்யிலில் காய்ந்து கொண்டும் நிற்கின்றன"

"சரி. வேண்டிய மூங்கிலும், தென்னை ஓலையும் எடுத்துச் சென்று கூரை அமைக்கலாமே" என்றார் அன்னையார்.

அப்படியே செய்தார் பணியாளர்.

மீண்டும் பணியாளர் முகத்தில் வாட்ட‌ம்.

"ஏன் வாட்டமாய் இருக்கிறீர்கள்?"என்று அம்மையார் கேட்டார்.

"வைக்கோலும் பருத்திக்கொட்டை தீவனம் வாங்கக் காசுக்கு எங்கே போவேன்?"  என்றார் பணியாளர்.

"சரி, நமது கோசாலையில் இருந்து வைக்கோலும், தீவனமும் எடுத்துச்சென்று
மாட்டுக்குப் போடும்" என்றார் அன்னை.

மகிழ்ச்சியுடன் பணியாளர் எடுத்துச் சென்றார்.

மறுநாளும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டார் பணியாளர்.

காரணம் கேட்ட அன்னையிடம் கூறுவார்." பாலை சந்தைக்குக் கொண்டு சென்றால் குறைந்த விலைக்குக் கேட்கிறார்கள்".

"அப்படியா? அந்த மாட்டுப் பாலை ஆஸ்ரமத்திற்கே விலைக்குக் கொடும்"'.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சீடர் ஒருவர் அன்னையைக் கேட்டார்.
"இப்படி எல்லாவற்றையும் கொடுத்துப் பின்னர் காசு கொடுத்துப் பால்
வாங்குவதற்கு பதில் நேர‌டியாகவே இந்தப் பணத்தை கொடுத்து உதவியிருக்கலாமே!"

அன்னை அன்புடன் கூறினார்:

"நீங்கள் சொல்வது போல் செய்திருந்தால் நமக்கு அக்ங்காரம் வந்திருக்கும். அவருக்குத் தாழ்வுணர்ச்சி வந்திருக்கும்.அவருக்குத் தானே சம்பாத்தித்துக் கடனை அடைத்தோம் என்ற திருப்தி வரவேண்டும்.எனவே தான் அப்படிச் செய்தேன்"

மகான்களின் உள்ளம் எப்படி செயல் படும் என்பது நமக்கு எப்படித் தெரியும்?

வாழ்க பப்பா ராமதாஸ்ஜி நாமம்!  வாழ்க அன்னை கிருஷ்ணாபாய்!  

Sunday 22 May 2011

தூய அன்னை ஸ்ரீசாரதாமணி அம்மையார்


தூய அன்னை ஸ்ரீசாரதாமணி அம்மையார் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு ஏற்ற மனைவி மட்டும் அல்ல;பரமஹம்சரின் முதல் சீடரும் ஆவார்.

அன்னையைப்பற்றி ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்லும் போது நெகிழ்ந்து விடுவார்.

"அன்னை மட்டும் சாதாரணப் பெண்களைப் போல உலகப்பொருட்களுக்காக என்னை நச்சரித்து இருந்தால் இந்த ராமகிருஷ்ணன் உங்க‌ளுக்குக் கிடைத்திருக்க மாட்டான்.இவனும் ஒரு பணம் சமாபதிக்கும் யந்திரம்போல ஆகி, ஒன்றுக்கும் உதவாதவனாகப் போயிருப்பான்.அன்னையின் தியாகமே என்னை மனித நிலையில் இருந்து தெய்வத்தை நோக்கி உயர்த்தியது" என்பார் குருதேவர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் முதலில் 6 வயதே ஆன குழந்தை சாரதையை மணந்து கொண்டார்.அன்னை பூப்பெய்தி அவரிடம் வந்து சேர்வதற்குள் ச‌ன்னியாசத்தை
ஏற்றுக் கொண்டுவிட்டார்.

"நான் சன்னியாசத்தைக் கைவிட்டு உன்னுடன் சாதாரணக் கணவன் போல வாழட்டுமா? அப்போது நமக்கு ஒரு சில குழந்தைகளே இருக்கும். ஆனால் நாம் ஆன்மீகத்தில் ஈடுப‌ட்டு நம‌க்கென்று குழந்தை குட்டிகளைப் பெறாமல் இருப்போமாயின், இந்த உலகமே நம்மை தாய் தந்தையாக ஏற்றுப் போற்றும்.
எது வேண்டும் சொல்லுங்கள் தாயே!"என்றார் பரமஹம்சர்.

அன்னை சற்றும் தயங்காமல், "நான் லோக மாதாவாகவே இருக்க விரும்புகிறேன்" என்றார்.இதைச்சொல்லும் போது அன்னைக்கு 15,16 வயது இருக்கலாம்.

"அவள் மட்டும் என்னைத் தூண்டுவது போல நடந்திருந்தால், என் சன்னியாசம் எல்லாம் வெறும் கேலிக் கூத்தாக ஆகியிருக்கும்" என்பார் பரமஹம்சர்.

அவ்ர்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது.

தன்னுடன் எந்த இடத்திற்கு அன்னை வரலாம், வரக்கூடாது என்பதினைப் பரமஹம்சர் சொல்லும் சொற்களை வைத்தே அன்னை புரிந்து கொள்வாராம்

"நீங்களும் என்னுடன் வாருங்கள்" என்று பரமஹம்சர் சொன்னால் அதனை
அன்னை ஏற்று அவருடன் செல்வாராம்.

"என்ன, நீங்களும் எங்களுடன் வருகிறீர்கள்தானே?" என்று பரமஹம்சர் கேட்டால் அன்னை குருதேவர் தான் வருவதை விரும்பவில்லை என்பதைப்புரிந்து கொண்டு விலகிவிடுவாராம்.

துறவியர்களுக்குத் துறவியாக வாழ்ந்து காண்பித்தார்கள்.

கிரஹஸ்தர்களுக்கு இல்லற‌த்தாரைப் போலவே வாழ்ந்து காண்பித்தார்கள்.

இந்த உன்னத தம்பதிகளின் பாதம் பணிவோம்.

Thursday 19 May 2011

மனிதனின் உணவு எது?சைவமா அசைவமா?



இந்தக் கேள்வி நீண்ட விவாதத்தைத் தோற்றுவித்துள்ளது. வலைதளங்கள் பலவற்றிலும் இந்த விவாதம் நடந்து வருகின்றது. எந்த ஒரு முடிவும் எட்டப்படாத ஒரு தலைப்பு இது.

மனிதன் அசைவம் ,சைவம் இரண்டையுமே சாப்பிடும்படிக்கு உடல் நிலை அமைப்புப் பெற்றுள்ளான்.எனவே எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்பது ஒரு சரியான வாதமே.

மாடு, ஆடு, மான்,குதிரை யானை, ஏன் நீர்யானை, காண்டாமிருகம் எல்லாமும் சைவத்தையே உண்கின்றன. அசைவம் சாப்பிடும் சிங்கம் புலி, போன்றவை உணவுக்காக அசைவ உணவு சாப்பிடும் மிருகஙளைக் கொல்வதில்லை. தன்னுடைய வாழ்விடங்களுக்கான சண்டையிட்டு
மற்ற தன் இன மிருகங்களைக் கொல்லுமே தவிர, உணவுக்காக ஒரு அசைவப் பிராணி மற்றொரு அசைவப் பிராணியைக் கொல்லுவதில்லை.

மிருக இனத்தில் அதன் அதனுடைய இயற்கையான உணவு எது என்பதை
கடவுள் அல்லது இயற்கையே அவற்றுக்கு அறிவுறுத்தி உள்ளது.
மாடு தன் உணவு புல் என்பதையும்,ஆடு தன் உணவு இலை தழை என்பதையும்,யானை கரும்பு, மூங்கில்,தென்னைமட்டை என்பதையும் நனகு அறிந்துள்ளன‌. அதுபோலவே சிங்கம்,புலி தஙளுடைய உணவு மான், ஆடு மாடு என்பதை நன்கு அறிந்துள்ளன.

அதுபோல மனிதன் தன் உணவு இயற்கையாக இதுதான் என்பதை அறிந்துள்ளானா?எதை வேண்டுமானாலும் மனிதக்குடல் ஏற்றுக்கொள்கிறது
என்பதால் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாமா?

எல்லோருமே சைவமாக மாறிவிட்டால் சைவ உணவுக்குத் தட்டுப்பாடு வந்துவிடும்.மிருகங்க‌ள் கொல்லப்படாவிட்டால் அவற்றின் எண்ணிக்கை அதிகமாகிவிடும்.தோலுக்காகக் கொல்லப்படும் மிருகங்கள்,தோலை எடுத்தபின்னரே உணவாகப் பயன் படுகிறது.இவையெல்லாம் அசைவக்காரர்ர்கள் முன்னிறுத்தும் சில வாதங்கள்.இவை யாவற்றுக்கும் தக்க பதில் நம்மிடம் உண்டு.

நம் கேள்வி ஒன்றே ஒன்றுதான்.மனிதனின் இயற்கை உணவு எது?

ஏனைய மிருகங்கள் உண‌வை சமைத்து உண்பதில்லை.அதுபோலவே எதையெல்லாம் மனிதனும் சமைக்காமல் உண்ண முடியுமோ அவைதான் மனிதனுடைய இயற்கை உணவு. எல்லாப் பழங்களையும் மனிதன் சமைக்காமல் சாப்பிடலாம். இயற்கையே நமக்காகப் பழங்களை சூரிய ஒளியில் சமைத்துக் கொடுத்து விட்டது.அதுபோலவே பல காய்களையும் நாம் சமைக்காமல் அப்படியே சாப்பிடலாம்.தேங்காய் சமைக்காமல் உண்ணலாம்.
எனவே எதை நாம் சமைக்காமல் சாப்பிட முடியுமோ அதுதான் நமது இயற்கை உணவு.

இந்த வாதத்தின் படி எந்த அசைவ உணவையும் சமைக்காமல் மசாலா சேர்க்காமல் உண்ண முடியாது.எனவே அசைவம் மனிதனின் இயற்கைக்கு எதிரானது. சைவமே மனிதனின் இயற்கையான உணவு என்பதே உண்மை.



Tuesday 17 May 2011

அமாவாசை அன்று வந்த நிலா!!



பத்திரிகை ஆசிரியர் பணி என்பது எளிதானது அல்ல. எழுத்தாளர்கள்
அனைவருமே உணர்ச்சி வயப்படக் கூடியவர்களே.ஏதோ ஓர் உணர்ச்சி எழுத்தாளர்களை வந்து கவ்வும் போது எழுதத் துணிந்து விடுவாகள்.சமூகத்தில் தன் எழுத்தினால் என்ன பின் விளைவுகள் தோன்றும் என்றெல்லாம் யோசிக்காமல் எழுதிவிடுவார்கள்.அப்படியெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தால் கணக்குத்தான் வருமே தவிர‌, இலக்கியம் வராது.

ஓர் இதழ் ஆசிரியரின் பணியே இலக்கியத்தை சிதைத்து விடாமல்,
எழுத்தாளரின் படைப்பை செப்பம் செய்து,முன் பின் விளைவுகளைப் பற்றி ஆய்ந்து,காய்தல் உவத்தல் இல்லாமல், நடுவுநிலையில் நின்று ஆக்கத்தை எல்லோருக்கும் மகிழ்ச்சி தோன்றும் வண்ணம் வெளியிடுதலே ஆகும்.

எழுத்துப்பிழை, கருத்துப்பிழை,இலக்கணப்பிழை அனைத்தையும் சரி செய்ய வேண்டியது ஆசிரியரின் பொறுப்புத்தான்.

தமிழ்த்தாத்தா உவேசா அவர்களின் மாணவரும், கலைமகள் மாத இதழின்   ஆசிரியருமான வாகீச கலாநிதி கி.வா.ஜகன்னாதன் அவர்கள்
சிறந்த தமிழறிஞர் மட்டும் அல்ல. நல்ல சொற்பொழிவாளர்.நல்ல எழுத்தாளர்.
முக்கியமாக நல்ல இதழ் ஆசிரியர்(எடிடர்)

கலைமகளில் ஸுபா என்ற ஓவியர் படம் வரைந்து கொடுத்து வந்தார்.ஒரு முறை கலைமகள் தீபாவளி மலருக்கு ஸுபா ஓவியம் வரைந்து கொடுத்தார். அது ஒரு சிறு கதைக்கான ஓவியம். கதைப்படி தலை தீபாவளிக்கு  மாப்பிள்ளை மனைவியின் பிறந்த‌கத்திற்கு வந்துள்ளார். இளம் தம்பதிகள் தனிமையில் வீட்டின் மொட்டை மாடிய்ல் சந்தித்துக் கொள்கிறார்கள். வீட்டின் கிணற்ற‌டி,தோட்டம், தென்னை மரம் என்று அழகாக ஓவியத்தை வரைந்து இருந்தார் ஸுபா.வானத்தில் முழுநிலவு, அந்த நிலவு அளித்த மயக்கத்தில் காதல் வயப்பட்டு ஆணும் பெண்ணும் மகிழ்வுடன் காண்பதாக ஓவியம் அருமையாக இருந்தது.

பலரும் அந்த ஓவியத்தைப் பார்த்துப் பாராட்டிவிட்டனர். உதவி ஆசிரியர்கள் எல்லோரும் பார்த்துப் பாராட்டி ஒப்புதல் அளித்த பின்னர் தலைமை ஆசிரியர் கிவாஜ அவர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது ஓவியம். அவர் பார்த்து ஒப்புதல்
அளித்தாலே பிரசுரம் செய்ய முடியும்.உயர்திரு கிவாஜ அவர்கள் ஓவியத்தை உற்று நோக்கினாராம்.ஓவியர் ஸுபாவிடம்," மாப்பிளை தீபாவளிக்கு அல்லவா மாமனார் இல்லத்துக்கு வந்திருக்கிறார்?" என்று கேட்டாராம்.

"ஆமாம்!"  

"அப்புறம் எப்படி முழு நிலவை இந்த ஓவியத்தில் காண்பித்தீர்?"

"ஏன்?அந்தக் காதல் சூழலுக்கு நிலவு நல்ல உதவிதானே?"

"காதலுக்குச் சரி!தீபாவளிக்குப்பொருத்தம் இல்லயே!"

"ஏன் எப்படி?"


"தீபாவளி அமாவாசை அன்று அல்லாவா கொண்டாடப்படும். அன்று எப்படி முழு நிலவு இருக்கும்?"

ஓவியர் ஸுபா ஆசிரியர் கிவாஜ அவர்களின் கூர் நோக்கைக் கண்டு வியந்தாராம்.

ஆம்! கூர் நோக்கு உள்ளவர்களே இதழ் ஆசிரியப் பணி செய்ய முடியும். அதற்கு நல்ல எடுத்துக்காட்டு வாகீச கலாநிதி உயர்திரு கிவாஜ அவர்கள்.

Saturday 14 May 2011

முதலையிடமிருந்து தப்பிய விவேகானந்தர்!!



நம் நாட்டிற்கு வந்த ஐரோப்பியர்கள் இங்குள்ள சமூக அமைப்புக் காரணமாகவே இந்த மக்க‌ள் எந்தத் துன்பத்தையும் தாங்கிக் கொள்கின்றனர்.அதனால் சமூகம் கட்டுக் கோப்பை இழக்காமல் உள்ளது. இவர்களைப் பிரிக்க ஒரே வழி இவர்களுடைய சமூக வழிமுறைகளையும், பழக்க வழக்கஙளையும் இழிவாகப் பேசி இந்த மக்களையே தங்களுடைய பல்லாண்டுகளாகப் புழக்கத்தில் இருக்கும் எல்லா செயல்பாடுகளின் மீதும் அவநம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பிராச்சாரத்தைச் செய்தார்கள்.

"இந்திய மக்கள் அனைவருமே பாம்பு வழிபாட்டுக்காரர்கள்;30000 உருவங்களை வைத்து வழிபாடு செய்பவர்கள்;பிறந்த குழந்தைகளை கங்கையில் முதலைக்குப் போட்டு விடுவார்கள்; அல்லது ஜகன்னாதர் கோவில் ரத யாத்திரையில் குழந்தைகளை தேர்ச் சக்கரத்தில் பலி கொடுப்பார்கள்....." இப்படிப் பொய்யும்,மிகைப் படுத்தலுமான பிரசாரத்தை செய்தார்கள்.

பல வெளி நாடுகளிலும் இந்தப் பிரசாரம் செய்யப்ப‌ட்டு உலக நாடுகளில் உள்ள மக்கள் அனைவரும் இந்தியா பாம்புப் பிடாரர்களையும்,
காட்டுமிராண்டிகளையும் கொண்ட நாடு; இந்தியர்களை நாகரீகப்படுத்தும் அரும் பணியை ஐரோப்பியர்களும்,கிறிஸ்துவ மிஷனரிகளும் செய்து வருகிறார்கள் என்று நம்பும்படிக்கு அவர்களுடைய பிரச்சாரம் இருந்தது.


இப்படிப்பட்ட சூழலில்தான் சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்றார்.
உலக மதப் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டதால் அவருடைய புகழ் எங்கும் பரவியது.

அமெரிக்காவில் அவர் சென்ற இடத்தில் எல்லாம் அவ‌ரிடம் சாதாரண மக்கள்,
"உங்கள் நாட்டில் குழந்தைகளை முதலைக்குப் போட்டு விடுவீர்களாமே.."
என்று கேட்பார்களாம்.

சுவாமி விவேகானந்தர், புன்முறுவலுடன் சொல்வாராம்," ஆம்! என் தாயார் கூட என்னை முதலையிடம் போட்டு விட்டார்கள்! ஆனால் பாருங்கள் என் உடல் மிகப் பருமனாக இருந்ததால் முதலையால் விழுங்க முடியவில்லையாம். அதனால்தான் நான் உயிர் பிழைத்து உங்கள் முன்னால் நிற்கிறேன்"

இதைக் கேட்டுவிட்டு மக்கள் நகைத்து விட்டு தெளிவடைவார்களாம்.
   

Friday 13 May 2011

மாலை மாற்று==2



முன்பு ஒரு பதிவில் மலைமாற்றுப் பதிகத்தை கொடுத்து அதன் பொருளைக் கேட்டு இருந்தோம். அதற்கு 'சிவ‌யசிவ' வலைப்பூவின் ஆசிரியர்
உயர்திரு ஜானகிராமன் 
அவர்கள் 
அருள்கூர்ந்து விளக்கம் அளித்துள்ளார்கள்.
அவருக்கு அனுராதாவின் நன்றி. அனுராதா எல்லோருடமிருந்தும் தரமான கட்டுரைகள் ,கதைகள், கவிதைகள், நாடகங்களை எதிர் பார்க்கிறது.
=========================================================

''யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா

தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா பொலேமே

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ

நேணவரா விழயாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாய ரிளேதகவே யேழிசையாழவி ராவணனே

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா

வேரியுமேணவ காழியயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயழிகாவண மேயுரிவே

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயா தமிழாகரனே"


மேலே கண்டுள்ளது திருஞான சம்பந்த சுவாமிகள் எழுதிய மாலை மாற்றுப்
பதிகமாம்.

===========================================






சிவசிவ



மாலை மாற்று

திருஞானசம்பந்தர் அருளிச் செய்த மாலை மாற்று - என்னும்
திருப்பதிகத்திற்கான உரையை சிந்திப்பதற்கு முன்னர்
அப் பதிகத்திற்கன இலக்கண வரலாறு குறித்து சிந்திப்பது
அதன் பெருமையை மேலும் பறைசாற்றும்.

தமிழ் இலக்கணம் அக இலக்கணம், புற இலக்கணம் என
இரு வேறு கூறுகளை கொண்டிருந்தாலும், அவற்றில் மிக முக்கியமாக கருதப்படுவது,

எழுத்து இலக்கணம்,
சொல் இலக்கணம்,
பொருள் இலக்கணம்,
யாப்பு இலக்கணம்,
அணி இலக்கணம்,

என்னும் ஐந்து வகையான இலக்கணங்களாகும்.

இதில், திருஞானசம்பந்தர் அருளிச் செய்த மாலை மாற்று - என்னும் திருப்பதிகம் " அணி இலக்கணம் " என்னும் வகையை சார்ந்ததாகும.

இன்னும் சரியாகச் சொல்லப் போனால்,

இந்த அணி இலக்கணம் என்பது

" பொருள் அணி " மற்றும் " சொல் அணி " என இருவகைப்படும்

இவற்றில்

பொருள் அணி என்னும் இலக்கணம் - 100 வகைப்படும்.

சொல் அணி என்னும் இலக்கணம் - 2 வகைப்படும்.

இந்த சொல் அணியின் இரண்டு வகையாவன,

மடக்கு மற்றும் சித்திரக்கவி எனப்படும்.

ஆக,

திருஞானசம்பந்தர் அருளிச் செய்த மாலை மாற்று -
என்னும் திருப்பதிகம் " சொல் அணி இலக்கணத்தில் உள்ள சித்திரக் கவி " என்னும் வகையைச் சார்ந்ததாகும்.

இதில் என்ன சிறப்பு என்றால்,

தமிழ் கூறும் நல்லுலகில் இந்த இருவகையான
( மடக்கு மற்றும் சித்திரக் கவி )
இலக்கணப் பிரிவுகளையும் முதன் முதலில் தமிழுக்கு அறிமுகப் படுத்தியவர் என்னும் பெருமை திருஞானசம்பந்தரையே சாரும்.

இந்த மாலை மாற்று என்னும் திருப்பதிகம் - சித்திரக் கவி என்னும் வகையைச் சார்ந்தது என்று பார்த்தோம்.

சித்திரக் கவி என்றால் என்ன ?

கடுமையான சொல் ஆட்சிகளையுடைய பாடல்களுக்கு
சித்திரக் கவி என்று பெயர்.

சித்திரக் கவிக்கு - மிறைக் கவி என்றும் ஒரு பெயர் உண்டு.

இந்த சித்திரக் கவி என்னும் அமைப்பில் இலக்கிய இலக்கணத்தில் தலைசிறந்த அறிஞர்களால் மட்டுமே பாட முடியும் என்பதே இதன் தனிசிறப்பாகும்.

சித்திரக் கவி என்பதற்காக - பொருளற்ற வார்த்தைகளைப்
போட்டு எடக்கு மடக்காக "  பாடாமல் -
பொருள் பொதிந்து பாட வேண்டும் என்பதே
இதன் பெருமைய உணர்த்தும்.

அவ்வாறு மிக அரிய கருத்துகளை உள்ளடக்கிப் பாடப்பட்டதே 
" மாலை மாற்று " என்னும் திருப்பதிகமாகும்.

உவமையிலா கலைஞானமும் +
உணர்வரிய மெய்ஞ்ஞானமும் கைவரப்பெற்ற திருஞானசம்பந்தப் பெருமான்,

இது போல கிட்டத்தட்ட 15 வகையான சித்திரக் கவிகளை பாடியுள்ளார்.

அவை,

01.  மொழி மாற்றுப் பதிகம்
02.  மாலை மாற்று
03.  வழிமொழி
04.  மடக்கு
05.  ஏகபாதம்
06.  திரு இருக்குக் குறள்
07,  திரு எழு கூற்றிருக்கை
08.  ஈரடி
09.  ஈரடி மேல் வைப்பு
10.  நாலடி மேல் வைப்பு
11.  முடுகு இராகம்
12.  சக்கரமாற்று
13.  வழி முடக்கும் ஆவின் பாய்ச்சல்
( திருக்கோமூத்திரி அந்தாதி )
14 .  திருப் பல்பெயர் பத்து
15 .  வினா - உரை


இத்தகைய சிறப்புமிக்க சித்திரக் கவிகளுள் ஒன்றுதான் -
" மாலை மாற்று " என்னும் திருப்பதிகமாகும்.


மாலை மாற்று - என்றால் என்ன ?

ஒவ்வொரு அடியிலும்,

முதலிலிருந்து இறுதிவரை அமைந்த ஒரு பாடல் வரியை
இறுதியிலிருந்து முதல் எழுத்து வரை அப்படியே திருப்பிப் படித்தாலும் எந்த மாற்றமும் இல்லாமல் அமைந்த பாடல் வரிக்கு மாலை மாற்று என்று பெயர்.

எடுத்துக்காட்டாக பார்த்தோம் என்றால்,

விகடகவி
குடகு
தாத்தா
குருகு
தேருவருதே

இப்படி எப்படி படித்தாலும் பொருள் தரும் வார்த்தைகள் நிறைய இருக்கின்றன.

ஆனால் இப்படி எளிமையாக ஒரு சொல்லில் அமையும் ஒரு விசயத்தை - ஒரு பதிகமாகவே பாடியிருக்கிறார் என்றால் திருஞானசம்பந்தரது பெருமையை என்ன வென்று சொல்வது ?


இப்பதிகத்திற்கான விளக்கத்தை பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும் - என்னும் பகுதியில் காணலாம்.

அதற்கான சுட்டி இங்கே...



திருச்சிற்றம்பலம்

Monday 9 May 2011

ஆபியம், கிட்டிப்புல், பம்பரம் போயாச்சு;


"ஆபியம், கிட்டிப்புல், பம்பரம் போயாச்சு;
ஹாபியாய் வீடியோ கேமாச்சு; -ஹேப்பியாய்
குந்தி விளையாடும் கேம்ஸின் அடிமைகளாய்
சந்ததிகள் ஆயிடுச்சே தான்!"
(www.thinnai.com)

மேலே கண்டுள்ளது அகரம்.அமுதாவின் ஒரு வெண்பா. இதுபோல நிறையத் தந்து இருக்கிறார். திண்ணை இணைய தளத்தில் காணலாம்.

இந்த வெண்பா படிக்க நகைச்சுவை போல் தோன்றினாலும் மிகவும் முக்கியமான ஒரு செய்தியைச் சொல்லுகிறது.என்னை சிந்திக்கத் தூண்டியது.உங்க‌ளையும் தூண்டும் என்றே நினைத்து எழுதத் துணிந்தேன்.

நமது சமூகத்திற்கே உரிய விளையாட்டுக்கள் எல்லாம் மறைந்துவிட்டன.

இதில் ஆபியம் என்பது பச்சைக் குதிரை தாண்டுத‌ல். அதாவது ஒருவனை குனியவைத்து அவன் முதுகில் கை ஊன்றித் தாண்டுதல். சோழநாட்டில் ஆபியம் என்பார்களாம்.அதற்கு ஒரு சுவாரஸ்யமான‌ பாட்டு:

"ஆபியம்...
மனியாபியம்...
இஷ்ட்டாபியம்...
குரங்காபியம்... 
நகரத்தின் எல்லைக் கோடு...
குட்டிச் சாத்தான் மண்ணைத் தின்றான்...
தற... தற... *த்துல உதை!"  

அந்தப் பாட்டில் இன்னொரு வகை:

"ஆபியம்
இஸ்டாபியம்
ல்க்டுதட்பரிசு
லாம்லாத்பரிசு
சோடா கலர்
உடைச்சி தாரேன் குடிச்சுக்க..."

(நன்றி:http://www.kudukuduppai.blogspot.com)

கிட்டிப்புல்,அல்லது கில்லி தாண்டல் என்பது நம் ஊர் கிரிக்கெட்! அதில் கில்லி விழுந்த இடத்திற்கு தாண்டலால் இத்தனை அளவு என்று கேட்க வேண்டும்.அப்படி அளக்கும் போது அதற்கும் பாடல் உண்டு. 

பம்பரம் விளயாட்டில், நல்ல வேகத்தில் பம்பரம் அசையாமல் சுற்றிக் கொண்டிருக்கும். அதற்குத் தூங்குதல் என்று பெயர்.அப்போதும் சில பாடல்கள் உண்டு.

பாண்டி விளையாட்டுக்கும் பாடல் உண்டு.

கோலிக் குண்டு விளையாட்டு குறிபார்த்து அடிக்க க‌ற்றுக் கொடுக்கும்.

சடுகுடு, அல்லது கபாடி பாட்டுப் பாடிதான் மூச்சடைத்து எதிர் அணியின் கோட்டைக்குள் நுழைய வேண்டும்.

தோற்றவன் முதுகில் உப்பு மூட்டை ஏறி சவாரி செய்யும் வாண்டுகள். 

இன்னும் எவ்வளவோ விளையாட்டுக்கள்.எல்லாம் போன இடம் தெரியவில்லை.

மைதானத்தில் சென்று ஓடியாடி விளையாடும் பழக்கம் எல்லாம் குழந்தைகளிடம் இல்லை.அருகிவிட்டது. எல்லோரும் கம்ப்யூட்டெர் விளையாட்டுக்களில் மூழ்கி, மற்ற பிள்ளைகளுடன் பழகவோ, பேசவோ, அறியாமல் போய் விட்டனர்.விளையாட்டுத் தோழன்/தோழி என்று சொல்ல இன்று குழந்தைகளூக்கு யாராவது உண்டா? 

வெளிப்புற விளையாட்டுக்களால் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல,மன ஆரோக்கியம், பிறருடனான உறவுகள் எல்லாம் பலமடையும்.

கிராமப்புறங்களிலும் கூட இலவசத் தொலைக் காட்சியில் அடிதடி படம் பார்க்க பிள்ளைகள் அமர்ந்து விடுகின்றன.

ஆரோக்கியம் கருதியாவது பிள்ளைகளை தினசரி மாலையில் நல்ல விளையாட்டுக்களில் ஈடுபடுதத வேண்டும். 

பெற்றோர்களும் ஆசிரியர்களும் இதற்காக இணைந்து பாடுபட வேண்டும்.

செய்வார்களா? 

Sunday 8 May 2011

ஸ்ட்றோக்====மாரடைப்பு


ஸ்ட்றோக்====மாரடைப்பு
=========================

மாரடைப்பின் அறிகுறிகள் தெரிந்த 3 மணி நேரத்துக்கள் மருத்துவ வசதி கொடுத்தால் நோயாளி கைகால் பாதிப்பு ஏற்படாமல் தப்பிக்க முடியும்.

ஆனால் அறிகுறிகள் எப்படி இருக்கும்? நோயாளி இடது தோள்வலி அல்லது மார்வலி பற்றிச் சொல்லிவிட்டு சோர்வாகப் படுப்பார். சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு வலி தெரியாது என்றும் சொல்லப்படுகிறது.

நான்கு வகையான எளிதான சோதனைகள் மாரடைப்பை உறுதிப்படுத்தும்.

1. நோயாளியைப் புன்னகைக்கச்சொல்லவும்.
2. இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தச் சொல்லவும்
3. ஏதாவது ஒரு வாக்கியத்தை முழுமையாகச் சொல்லச் சொல்லவும்.
4. நாக்கை வெளியே நீட்டச் சொல்லவும்.

இவற்றில் ஏதாவது இரண்டைச் செய்ய முடியாவிட்டாலும் மருத்துவ வசதியை நாடுதல் நலம்.

இந்தச் செய்தியை எவ்வளவு பேருக்கு மின்னஞ்சல் அனுப்புகிறீர்களோ அவ்வளவுக்கு விழிப்பு உணர்வு ஏற்படும்.ஓர் உயிராவது காப்பாற்றப்படும்.
நன்றி!

Saturday 7 May 2011

தாயும் ஆனவர்




பக்திநெறி நிலைநின்றும், நவ கண்ட பூமிப்
     பரப்பை வலமாக வந்தும்,
  பரவை இடை மூழ்கியும், நதிகள் இடை மூழ்கியும்,
     பசிதாகம் இன்றி எழுநா

மத்தி இடை நின்றும், உதிர் சருகு புனல் வாயுவினை
    வன்பசி தனக்கு அடைத்தும்,
  மெள‌னத்து இருந்தும்,உயர் மலைநுழைவு புக்கியும்,
    மன்னு தச நாடி முற்றும்

சுத்திசெய்தும்,மூலப் பிராணனோடு அங்கியைச்
    சோம வட்டத்து அடைத்தும்,
  சொல் அரிய அமுதுண்டும்,அற்ப உடல் கற்பங்கள்
    தோறும்நிலை நிற்கவீறு

சித்திசெய்தும், ஞானம் அலது கதி கூடுமோ
    சித்தாந்த முத்தி முதலே
 சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே
    சின்மயானந்த குருவே!
=======================================================================
அரும் பத உரை
‍‍‍‍===============

பரவை=கடல்;  எழுநா=தீ,நெருப்பு,அக்னி;புனல்=நீர்,தண்ணீர்;  


மலைநுழைவு=மலைக் குகை; புக்கி=புகுதல்,நுழைதல்;

நாடி முற்றும் சுத்தி செய்தும்= நாடிசுத்திப் பிராணாயா ம‌ம் செய்தும்

மூலப் பிராணனோடு அங்கியைச் சோம வட்டத்து அடைத்தும்=தியானத்தின் உச்ச‌ நிலை;சமாதிநிலை என்வும் கொள்ளத் தகும்

அற்ப உடல் கற்பங்கள் தோறும்நிலை நிற்கவீறு சித்திசெய்தும்= காயகற்பம் அதாவது உடல் நீண்டநாள் வாழும் வண்ணம் யோகம் பயிலுதல்;
=======================================================================

ஸ்ரீதாயுமானவ சுவாமிகளின் பாடல் இது.அரும்பத உரையை வைத்துக்கொண்டு நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

சொற்களைப் பிரித்து கமா போட்டு எழுதியுள்ளேன். அப்படிச் செய்வது இலக்கணப் பிழை.பண்டிதர்கள் மன்னிப்பார்களாக.

ஆன்மீகப் பயிற்சிகளின் நிலைகள் வரிசைப் படுத்தப் பட்டுள்ளன.

இதில் நாம் எங்கே இருக்கிறோம் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளலாம்.

நான் இன்னும் முதல் படியான பக்திநெறியிலேயே இருக்கிறேன்.

Thursday 5 May 2011

ஒசாமா டு ஒபாமா





ஒபாமா பதவியேற்ற புதிதில் அவருடைய பூர்வோத்திரம் ஊடகங்களில் அலசப்பட்டது.அவருடைய தந்தையார் முஸ்லிம் என்றும் அதனால் அவருக்கு முஸ்லிம் சார்பு நிலை உண்டு என்றும் பேசப்பட்டது.

அதற்கேற்றார் போல ஒபாமாவும் இஸ்லாம் சார்பு நிலை அறிக்கைகளை வெளியிட்டார். அமெரிக்க மண்ணில் போரையே சமீபத்தில் கண்டிராத அமெரிக்கர்களுக்கு இரட்டைக் கோபுரத் தகர்ப்பும் அதில் மாண்ட 3000 அமெரிக்கர்களையும் மறக்க முடியவில்லை.அந்தக் கோர சம்பவத்தில் மடிந்தவர்களுக்கு ஆன்ம சாந்தியாகப் பழிக்கு பழி வாங்க வேண்டும் என்பது மக்களின் ஏகோபித்த முடிவாக இருந்தது.

சரியும் பொருளாதாரம், வந்ததிலிருந்து சொல்லிக்கொள்ளும் படியாக எந்தத் திட்டமும் தராதது, இதையெல்லாம் எண்ணிப் பார்த்து தன் சரியும் 'இமேஜை' காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஒபாமாவுக்கு ஏற்பட்டுவிட்டது.

ஒபாமாவின் ஆலோசகர்கள் தீவிரவாதத்தை ஒழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுப‌ட்டால் உடனடிப் பயன் உண்டு என்று அறிவுறுத்தியிருக்கலாம்.பார்த்தார் ஒபாமா!  சி ஐ ஏ வுக்கு ஆணையிட்டார்."ஒசாமாவை உயிருடனோ, பிணமாகவோ பிடித்து வருவதைத் தலையாய பணியாகச் செய்ய வேண்டும்.இதற்குத்தான் முன்னுரிமை. (மற்றபடி உலகின் மற்ற பாகங்களில் நம் ஆயுதங்களை விலை போகச் செய்ய, போர் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதை கொஞ்சநாள் நிறுத்தி வைக்க வேண்டும்")

உடனே வேலையில் இறங்கியது சிஐஏ. 10 ஆண்டுகளாக ஒசாமா தங்கியிருந்த இடம் தெரியாதவர்களுக்கு, அபோட்டொபாத இப்போதுதான் தெரிய வந்ததாம்.
நம் ஊரில் நடக்கும் ஒரு சிறிய‌ ஆர்ப்பாட்டம் கூட முழுமையாக விடியோ எடுக்கப்பட்டு அமெரிக்க உளவுத்துறை ஆவணமாகி விடுவதாகக் கூறப்படுகிறது.அப்படியிருக்கும் போது ஒசாமாவின் இருப்பிடம் 10 வருடமாக அமெரிக்காவுக்குத் தெரியாது என்பது சும்மா கண்கட்டு வேலை.
இதுவரை நடவடிக்கை எடுக்காததற்கு ஜிஹாதிகளின் எதிர்வினையைப் பற்றிய பயம் கூடக் காரணமாக இருக்கலாம்.


என்ன காரணத்துக்காக இந்த நடவடிக்கை இவ்வளவு காலம் கிடப்பில் போடப்பட்டது என்பது யாருக்கும் தெரியாத நிலையிலும், அமெரிக்க அதிரடி வீரர்களின் சாகசம் பாராட்டுககுரியது.

ஜிஹாதிகளை சாதாரணமாக எடைபோடமுடியாது.ஒசாமா மறைவு ஒரு முடிவல்ல. தொடர்ந்த 'ஜிஹாதித்துவா'வுக்கு ஒரு முக்கியமான திருப்பம்.
எதற்கும் ஒபாமா தன் பதுகாப்பைப் பலப்படுத்துவ‌து நல்லது.

தேன்கூட்டில் கை வைத்துவிட்டார் ஒபாமா. கொட்டும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும்.
-------------------------------------------------------------------------------------------------------------
IMPORTANT NEWS:   BEWARE OF AN ANOUNCEMENT IN FACE BOOK, TWITTER etc., INVITING YOU TO CLICK TO WITNESS THE SHOOT OUT VIDEO OF OSAMA. THAT IS A VIRUS ATTACK CATCH. For further details see this link.

http://winmani.wordpress.com/2011/05/03/osama-binladen-killed-video/

Wednesday 4 May 2011

"மாலை மாற்று!"






''யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா

தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா பொலேமே

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ

நேணவரா விழயாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாய ரிளேதகவே யேழிசையாழவி ராவணனே

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா

வேரியுமேணவ காழியயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயழிகாவண மேயுரிவே

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயா தமிழாகரனே"


மேலே கண்டுள்ளது திருஞான சம்பந்த சுவாமிகள் எழுதிய மாலை மாற்றுப்
பதிகமாம்.

இதன் அமைப்பு முறை, பொருள் தெரிந்தால் கூறுங்களேன்


திருப்பி எழுத்து எழுத்தாகப் படித்தாலும் அதே சொற்கள் வருகின்றன.

விகடகவி என்பதை திருப்பிப்படித்தாலும் விகடகவியே வருவது போல.

நல்ல விளக்கம் அளிப்பவரது பின்னூட்டம் ஒரு பதிவாக நன்றியுடன் வெளியிடப்படும்.


Tuesday 3 May 2011

முறுக்கிக் கொள்ளலாமா...?


முறுக்கிக் கொள்ளலாமா...?


பேருந்தில் அமர்ந்திருந்த போது ஒரு வயசாளி கைநிறைய‌ முறுக்குப் பொட்ட்லங்களை வைத்துக் கொண்டு "முறுக்...முறுக்... "என்று கூவிக் கொண்டு போனார்.

அப்போ முறுக்கைப் பற்றி பல சிந்தனைகள் ஓடின‌.

இவரைப் பல தடவை கேட்டும் முறுக்குச் செயின் வாங்கித் தரவில்லை. ஓய்வு பெற்ற பின்னர், ஏதொ விடுப‌ட்ட சம்பளம் வந்த‌து. அந்த 'அரியர்' வந்த அன்று  ஒரு நாள் 'வாவா கடைக்குப் போவோம்'என்றுஅவசரப்படுத்தினார்.
ஒன்றும் சொல்லாமல் கூட்டிப்போய் தாலிக்கொடி,கயிறு முறுக்கின மாதிரி, வாங்கிக் கொடுத்தார்.

மாப்பிள்ளை முறுக்கு என்று ஒரு பதம் உண்டு. வேற்றகமான, மாமனார் வீட்டுகுப் போகும் போது தன் மகனுக்குத் தவறாமல் அம்மா சொல்லி அனுப்பவது

"அங்க போயி அசடாட்டம் வழியாதே.முறுக்கா இருந்துக்கோ"

வேறு எதில் கேட்கிறார்களோ இல்லையோ இந்த விஷயத்தை அம்மா சொற்படி கேட்டு விடுவார்கள் புது மாப்பிள்ளைகள்.மாம‌னார், மாமியார், மைத்துனனிடம் லேசில் வாய்விட்டுப் பேசி விட மாட்டார்க‌ள்.(குட்டி மைத்துனி இருந்தால் மட்டும் கொஞ்சம் முறுக்குத் தளரும்)

எங்க‌ள் ஊரில் ஒரு மைனர் இருந்தார்.முறுக்கு மீசை வைத்து இருப்பார். ஒரு நாளைக்கு 150 கிராம் வெண்ணைய் தடவி மீசையை நல்ல கூர்ப்பாக முறுக்கி விட்டிருப்பார்.அவர் பேரே முறுக்கு மீசை மைனர்தான்.

கோபத்தில் பேசாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு போகிறவர்களை
'முறுக்கிக்கொண்டு போனார்' என்று சொல்வது உண்டு.

முறுக்கு என்றாலே மணப்பாறைதான். உண்மையில் மணப்பாறைக்காரர்கள் அந்தத் தொழிலை ஆரம்பிக்கவில்லையாம்.பஞ்சம் பிழைக்க வந்த யாரோ ஒரு தென் மாவட்டக்காரர் ஆரம்பித்த‌தாம் அந்தத் தொழில். இன்று அந்தக் குடும்பத்தார் யாரும் அங்கே இல்லையாம். ஆனால் பலருக்கும் அது இன்று பிழைப்பாகிவிட்டது.

மிகவும் வேலை வாங்கினால் முறுக்குப் பிழிவது போல பிழிந்து விடுவார்கள் என்று சொல்வதுண்டு.

சினிமா தியேட்டரில் விற்பதற்கு என்றே ஒரு வகை முறுக்கு உண்டு. அந்த சுவையே தனி. அதுவும் ஓசியில் யாராவது வாங்கி கொடுத்தால் கூடுதலாக எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.இடை வேளைக்குப் பின்னர் படம் ஆரம்பித்த பின்னர் 'கடமுட' என்று கடித்து அக்கம் பக்கத்தில் அமர்ந்து இருப்பவர்களுக்குக் கடுப்பை கிளப்பலாம்.

கல்யாணச் சீர் முறுக்கு 5, 7. 9 என்று சுற்றுக்கள் பெரிய அளவில் செய்வார்கள்.அதில் வித வித மான வேலப்பாடுகள் எல்லாம் செய்து அசத்துவார்கள்.சாந்தி முகூர்த்தத்தில் வைப்பதற்கென்றே சில வகை டிசைன் எல்லாம் உண்டு.

என் பெரிய மைத்துனர் முறுக்கு விள்ளும் போதோ கடிக்கும் போதோ சத்தம் வரக்கூடாது என்பார். அப்படி சத்தம் வந்தால் கடுப்படிப்பார். அவர் மட்டும் எப்படியோ சத்தம் வராமல் முறுக்கு சாப்பிடுவார்.நம்மால் முடியாது.

நான் திருமணமாகி வந்த புதிதில் முதல் கோகுலாஷ்டமிக்கு முறுக்கு சுற்ற என் மாமியார் மாவைத் தயார் செய்து விட்டு, 'கையால் சுற்று' என்று கட்டளையிட்டார்கள்.நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவள்.  ஒரு முறை கூட கை முறுக்குச் சுற்றியதில்லை.மாமியாரிடம் முறுக்குச் சுற்றத் தெரியாது
 என்று சொல்லக் கூச்சம். துணிந்து ரொம்பத் தெரிந்தது போல சுற்ற ஆரம்பித்தேன்.அன்று கருமாரித்தாய் என்னுடன் இருந்து இருக்கிறாள்.என்ன ஆச்சரியம்! விள்ளாமல் விரியாமல் 10 பெருக்குத் தரும் அளவில் முறுக்கைத் தங்கு தடை இல்லாமல் சுற்றிக் கொடுத்தேன். மாமியார் எண்ணையில் போட்டுக் எடுத்தார்கள்.

என்னை அதட்டி வேலை வாங்கிய என் மாமியாருக்கு முறுக்குச் சுற்ற வராதாம்.கடைசி காலம் வரை அப்படிதான்.கை முறுக்கு மேல் ஆசை வந்த போதெல்லாம் நான் சுற்ற அவர்கள் வெந்து எடுப்பார்கள்.

இந்தப்பதிவு எப்படின்னு முறுக்கிக் கொள்ளாமல் சொல்லுங்கள்.நன்றி.

Monday 2 May 2011

நீயா..?.....நானா?....




ஒரு ஊரில் மாமியாரும் மருமகளும் "ஒற்றுமையாக" ஒரே வீட்டில் வாழ்ந்தார்கள்

ஒரு நாள் ஒரு பிச்சைக்காரர் வீட்டு வாயில் முன் வந்து நின்றார்.

"அம்மா!தாயே! பிச்சை போடுங்கள்!"

மருமகள் முன் தாழ்வாரத்தில் இருந்தார்.அதனால் பிச்சைக்காரரிடம்,

"போ!போ! பிச்சை இல்லை போ! போ!" என்றாள்.

மாமியார்காரி முன்றாம் கட்டில் இருந்தவள் ஏதோ வாயிலில் பேச்சுக்குர‌ல் கேட்கிறதே என்று எட்டிப் பார்த்தாள். பிச்சைக்காரர் விலகிச் செல்வது தெரிந்தது.உடனே விடு விடு என்று வாயிலுக்கு வந்தாள்.

அதற்குள் பிச்சைக்காரர் இரண்டு வீடு தள்ளிப் போய் விட்டார்.

"ஓய்! பிச்சைக்காரரே! இங்கே வாரும்!" என்று கூப்பிடாள் மாமியாரம்மா!

பிச்சைக்காரருக்கு ஒரே மகிழ்ச்சி!'ஆகா,போகச் சொன்ன வீட்டில் மீண்டும் கூப்பிடுகிறார்களே!எதோ கிடைக்கப்போகிறது' என்று ஆவலோடு ஓடிவந்தார்.

மாமியார்காரி கேட்டாள்:"என் மருமகள் உன்னிடம் என்ன சொன்னாள்?"

"போ,போ பிச்சை இல்லை என்று சொன்னார்கள்!"

"அதெப்படி அவ சொல்லலாம்!? நான் ஒருத்தி இங்கே இருப்பது கண்ணுக்குத் தெரியலையா?நான்தான் இந்த வீட்டுக்கு எஜமானி.  இப்ப நான் சொல்றேன் கேட்டுக்க!"

"சரி! கேட்டுக்கறேன் சொல்லுங்க!"

"போ!போ!பிச்சை இல்லை போ!போ!" என்றாளாம் மாமியார்காரி!

பிச்சைக்காரர் தன் விதியை நொந்து கொண்டு போனாராம்.

ஏன் இந்தக் கதை என்கிறீர்களா?

இப்படி ஒன்று அண்மையில் நடந்துள்ளது. எங்கேயா?

எல்லாம் நமது(அ)தர்மமிகு சென்னையில் தான்.

பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே மாதம் 14ல் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அறிக்கை விட்டார்கள்.

ஆண்டு தோறும் இந்த அறிவிப்பைக் கல்வி அமைச்சர்தான் செய்வாராம்.

இந்தஆண்டு என்னமோ இயக்குனர் அறிவித்துவிட்டார்கள்.

வந்ததே அமைச்சருக்குக் கோவம்!அவர் ஒரு அறிக்கை விட்டார்:"தேர்வு முடிவுகள் 9 ஆம் தேதியே வெளியிடப்படும்"

செய்தி இறக்கைகட்டிப்பறந்து போய் முதல்வரின் காதில் விழுந்தது.

"இது அமைச்சருக்கும் இயக்குனருக்கும் உள்ள கருத்து வேறுபாடு"
 என்றார் முதல்வர்.

அமைச்சருக்கும் இயக்குனருக்கும் நடுவில் சரியான 'கெமிஸ்டிரி'இல்லை போல!ஏன் ஃபிஸிக்ஸ், மேத்ஸ், பயாலஜி, ஹிஸ்டரி, எதுவுமே இல்லை என்று தோன்றுகிறது.(கல்வி அமைச்சக விஷயமா...?அதான் இப்படி.. ஹி.. ஹி..)

போகட்டும், விடுங்கள்! சும்மா கொஞ்சம் தமாஷ்!

நான் சொல்ல வந்த விஷயம் என்னென்னா 'மகளிர் அணி எல்லாவற்றிலும் முன்னால வந்து கிட்டு இருக்கு!'

இந்த ஆண்டு +2 எழுதியதில் பெண்கள் 50000 பேர் ஆண்களை விட அதிகமாக எழுதியுள்ளார்கள்.

பெண் தேர்வர்கள் எண்ணிக்கை=3,87,102
ஆண் தேர்வர்கள் எண்ணிக்கை=3,36,443
                                                              ==========      
பெண்கள் கூடுதலாக உள்ளது= 50659
                                                              ==========  
இது போலவே 10 ஆம் வகுப்புத் தேர்விலும் பெண்கள் 14000 பேர் கூடுதலாக எழுதியுள்ளார்கள்.

2020ல் வல்லரசுக் கனவு சாத்தியம் போல்தான் தெரிகிறது.பெண்கள் முன்னணிக்கு வந்து விட்டால் அது நல்லரசாகவும் அமையும்.

ஓர் ஆண் கல்வி கற்றால் அது அவனை மட்டுமே முன்னேற்றும். ஆனால் ஒரு பெண் கல்வி கற்றால் அந்தக் குடும்பத்திற்கே கல்வி கொடுத்தது போல என்பார்கள்.

இதைக்காண மஹாகவி பாரதி இன்று இல்லையே!

"ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே!" 


Saturday 30 April 2011

"இளைய பாரதத்தினாய் வா வா வா...."


இப்போது ந‌டந்து முடிந்த மக்கட்த் தொகைக் கணக்குப்படி 2018 ஆம் ஆண்டு 18 வயதில் இருந்து 25 வயதுவரை உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 30 கோடிக்கும் மேலே இருக்குமாம்.இது உலக நாடுகளிலேயே இளைஞர்களின் மக்கட்தொகையில் முதன்மையாக இருக்குமாம். இந்தக் கணக்கில் சீனா கூடப் பின்னால்தானாம்.

இதன் சாதக பாதகங்களை எண்ணிப் பார்த்தேன்.

சாதகமே நிறையத் தெரிந்தது.

முதலில் ஓட்டுரிமை பெற்ற ஒரு பெரிய இளைஞர் கூட்டம் இருக்கப் போகிறது.அன்னா ஹசாரேவுக்குப் பின்னால் நிற்கத் துணிந்த இளைஞர்களைக் கண்டோம்.சிறுமை கண்டு பொங்க‌க் கூடிய ஒரு பட்டாளம்  இளைமைத் துடிப்புடன் வெளி வந்தால் புரட்சிதான்.

புதிய பாதைகள், புதிய கண்டு பிடிப்புக்கள்,புதிய யுக்திகள் கோலோச்சும்.

ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாக வாழ்வதால்,கலப்புத் திருமணம், காதல் கடிமணம் அதிகமாகும். சாதிக்கட்டுக்கள் தளரும்.'இதெல்லாம் சஹஜமப்பா' என்ற மனோநிலை வரும்.

வாழ்வாதாரங்களை மேம்படுத்தப் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஒவ்வொருவரும் த‌குதியுள்ளவற்றிற்கே  இங்கு இடம் என்னும் பரிணாமக் கொள்கையால் பாதிப்பு அடைந்துள்ளதால், தன் தகுதிகளை மேம் படுத்திக்கொள்ள ஒவ்வொரு இளைஞனும் பாடுபடுவான்.


அதனால் உற்பத்திபெருகும். நாடு வளம் பெரும். இப்படி பல சொல்லிக் கொண்டே போகலாம். பல சொல்லக் காமுறவில்லை

எதிர்மறையில் ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விழைகிறேன். ஒழுக்கம் குன்றி விட்டால் எல்லாக் கற்பனைகளும் தவிடு பொடியாகிவிடும்.

டாஸ்மாக் கடைகள் நமது பெரும் வில்லனாக இருக்கும் என்று தோன்றுகிறது.அதற்கு எதிரான பிரச்சாரம் அவசியம் தேவை.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கும்!

சிறியன சிந்திக்க வேண்டாம்!

Thursday 28 April 2011

"மெல்லத் தமிழினிச் சாகும்...?"





மஹாகவி பாரதியாரைப் பற்றி யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம் என்ற நிலை உண்டாகிவிட்டது.

மேடை மீது ஏறி நின்று கொண்டு,"மெல்லத் தமிழினிச் சாகும்...' என்று பாரதியே சொல்லிவிட்டான்" என்று பேசக் கூடியவர்கள் பலர் உள்ளனர். ஒரு கூட்டத்தில் கவிஞர்(?) கனிமொழி அவ்வாறு திருவாய் மலர்ந்து அருளி இருக்கிறார்.

பாரதி அவ்வாறு கூறவில்லை என்று இவர்களுக்கு எத்தனை முறை கூறினாலும் செவிடன் காதில் ஊதிய சங்குதான்..!

சமீபத்தில் மூத்த நடிகர் சிவகுமார் தமிழ் புத்தாண்டு உரை விஜய் டி வியில் செய்தார்.பாரதியை அப்படியே ஒப்பித்தார். பல பாடல்களை அவ்ர் பாவத்தோடு ஒப்பித்தது பாராட்டுக்குரியது. அதுவும் அவர் வயதில் இவ்வளவு நினைவாற்றலா என்று ஆச்சரியமாக இருந்தது.நடிகர் குழாத்தில் இருந்து இப்படி ஒரு இலக்கியவாதியா? வியப்பாகத்தான் இருந்தது.

நடிகர் சிவகுமாரும் கூட பாரதியின் பாடலை அந்த ஒற்றை வரியுடன் தாவி விட்டார்.

உண்மையில் பாரதி தமிழன்னையின் கூற்றாக அப்படிச்சொல்கிறார்.
 'யாரோ ஒரு பேதை அப்படிச் சொல்கிறான்.அவன் கூற்றினைப் பொய்யாக்குங்குள்' என்று தமிழருக்கு ஆணையிடுகிறாள் தமிழன்னை.

பாடல் வரிகள் இதோ:


"கன்னிப் பருவத்திலே அந்நாள் - என்றன்
காதில் விழுந்த திசைமொழி எல்லாம்
என்னென்னவோ பெயருண்டு - பின்னர்
யாவும் அழிவுற்று இறந்தன கண்டீர்!

தந்தை அருள் வலியாலும் - முன்பு
சான்ற புலவர் தவ வலியாலும்
இந்தக் கணமட்டும் காலன் - என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி இருந்தான்

இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்!

"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ!
இந்த வசை எனக்கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

தந்தை அருள் வலியாலும் - இன்று
சார்ந்த புலவர் தவ வலியாலும்
இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்."

கூறியவனை 'கூறத்தகாதவன்' என்றும், 'அந்தப் பேதை' என்றும் சொலவதைப் பாருங்கள்."நான் சொல்வதைக் கேட்டு செயல் பட்டால்
"புவிமிசை என்றும் இருப்பேன்" என்றும் தமிழன்னை கூறுகிறாள்.கவனியுங்கள்.

ஆனால் தாய்த் தமிழகத்தில் ஆங்கில வழிக் கல்வியின் மோகம் வளர்ந்துள்ள இந்நாளில், தமிழ் வளர்ச்சி பற்றி இலங்கைத் தமிழர்களோ, வேறு மேலை நாட்டுத் தமிழ் அறிஞர்களோ கவலைப் ப‌ட்டால்தான் உண்டு.

தமிழ் இனக் காவலர்களுக்கு அவர்களுடைய சொந்தப் பிரச்சனைகளும்,சொந்த பந்தங்களைப் பற்றிய பிரச்சனைகளுமே அதிகமாக உள்ளது.

இதைப் போன்ற புலம்பல்களை எல்லாம் படிக்க அவர்களுக்கு நேரம் ஏது?

Tuesday 26 April 2011

பூசை வேண்டுமா?





திருவண்ணாமலை பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அதிகம் பேச மாட்டாராம். பேசினாலும் ரத்தினச் சுருக்கமாக வந்து விழுமாம்.

ஸ்ரீரமண ஆஸ்ரமம் ஆரம்பித்த புதிதில் எல்லாம் குடிசைகள்தான். இரவு ஹரிகேன் விளக்குதான். அப்போதே ஸ்ரீரமணருக்கு வெளிநாட்டுச் சீடர்கள் வர ஆரம்பித்து விட்டார்கள்.

வெளி நாட்டுக்காரர்கள் வந்து போவதால் ஸ்ரீரமணாஸ்ரமத்தில் நிறையப்பணம் இருக்கும் என்று சில தொழில் முறைத் திருடர்களுக்குத் தோன்றிவிட்டது.

ஒருநாள் நள்ளிரவில் ஆஸ்ரமத்தில் நுழைந்து அட்டகாசம் பண்ணிவிட்டார்கள்.

எல்லோரையும் எழுப்பி வரிசையாக நிறுத்தி விட்டார்கள்.

"இருட்டில் தேடுகிறீர்களே இந்தாருங்கள் விளக்கு" என்று ஹரிக்கேன் விளக்கைப் பொருத்திக் கொடுத்தாராம் ஸ்ரீரமணர்.

மண்ணைத் தோண்டிப் பார்த்தும் ஒன்றும் கிடைக்கவில்லை.கோவம் அடைந்து பக்தர்களை அடிக்கத் துவங்கினார்கள்.

'எங்கே ஒளித்து வைத்து உள்ளீர்கள்? சொல்லுங்கள்' என்று கேட்டு அடித்துள்ளார்கள்.

ஸ்ரீரமணர் மீதும் அடி விழுந்து விட்டது.பல மணி நேரம் தேடியும் ஒன்றும் கிடைக்காமல் திருடர்கள் ஓடிவிட்டார்கள்.

மறுநாள் காலை செய்தி ஊர் முழுவதும் பரவிவிட்டது.போலீசுக்கும் தெரிந்து
அந்த ஊர் காவல் ஆய்வாளர் ஆஸ்ரமத்திற்கு வந்து விசாரித்தார்.

"உங்க‌ளையும் அடித்தார்களா சுவாமி?" என்று கேட்டார்.

ஸ்ரீரமணர் சிரித்துக்கொண்டே, "சுவாமிக்கும் பூசை போட்டார்கள்" என்றாராம்

பூசை என்றால் அடித்தல் என்றும் பேச்சு வழக்கில் பொருள் உண்டு.

Monday 25 April 2011

"மது கைவிடேல்"


சென்ற ஆக்கத்தில் 'மனமது' என்று சேர்த்து எழுதியது ஏதோ "மது"வை நினைவு படுத்துவது போல உள்ளது என்று பெரியவர் கோபாலன் அவர்கள் கூறியிருந்தார்.

அதை ஒட்டி எழுந்த சில எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

முன்பெல்லாம் பதம் பிரித்து எழுதுவது குற்றமாகவே நினைக்கப்பட்டது. செய்யக்கூடாத இலக்க்ணப் பிழையாகவே கருதப்பட்டது. ஆனால் இன்று வெண்பாக்களைக் கூட பதம் பிரித்துச் சொல்ல வேண்டியுள்ளது.

"ஊக்கமது கைவிடேல்" என்பதற்கு ஊக்கம் அளிக்கக்கூடிய மதுவை, சாராயத்தைக் கைவிட வேண்டாம் என்பதாகவும் குயுக்தியாகச் சொல்லலாம் அல்லவா?அதுவும் சாராயத்திற்கு' உற்சாக பானம்' என்ற சொற்களை தினமலர் நாளிதழ் மக்கள் மனதில் பதித்து விட்டப் பிறகு நான் கூறிய பொருளைச் சொன்னால் அடுத்த தலைமுறை தங்களுடைய சாராயப் பழக்கத்திற்கு அவ்வையார் அளித்த அங்கீகாரம் என்று கூடப் பிரச்சாரம் செய்வார்கள்.
எனவே "ஊக்கம் அது கைவிடேல்" என்று பிரித்து எழுதி விடுவதே அவ்வைப் பாட்டிக்கு நாம் செய்யும் மரியாதை.

1980‍=90 களில் நாங்கள் நடத்தி வந்த சத் சங்கத்திற்கு ஒரு நாயர் வகுப்பைச் சார்ந்த அன்பர் வருவார். ஒருநாள் அவர் சிரித்துக்கொண்டே கூறினார்,

"கண்ண பரமாத்மா எங்க‌ள் நாயர் வகுப்பைச் சார்ந்தவர் தான்!"

"அதெப்படி? அவர் யாதவர் என்று சொல்லலாம், இடையர்களோடு வளர்ந்ததால்!பிற்ந்ததோ அரசர் குலத்தில்!அப்புறம் எப்படி நாயர் என்று சொல்கிறீர்கள்?"

"சிறிது நேரம் முன்பு நீங்கள் பாடிய பாட்டை மீண்டும் பாடுங்கள்."

"தாயே யசோதா உந்தனாயர் குலத்துதித்த...."

"நிறுத்துங்கள்! பாருங்கள் நீங்களேதானே பாடுகிறீர்கள் 'நாயர் குலத்து உதித்த.."

"ஹைய்யோ ஹைய்யோ! அது 'உந்தன் ஆயர் குலத்து உதித்த' நாயர் சார்!
போனால் போகட்டும். நாயர்கள் இப்படி ஒரு சந்தோஷம் அடைந்தால் அடையட்டுமே" என்றேன்

அந்தக்காலத்தில் சாப்பாட்டுக் கடைகளில் பிராமணர்களுக்குத் தனிப் பந்தி இருந்ததாம்."அன்ன விக்ரயம்" கலிகாலத்தில் நடக்கும்;அதையும் பிராமணனே செய்வான் என்று கலிகாலத்தினைப் பற்றிச் சொல்லியுள்ளதாம். என் மாமியார் சொல்லிக் கேள்விப் பட்டேன். 'அன்ன விக்ரயம்' என்றால் உணவினை வியாபாரமாக விற்பது. அதாவது ஹோட்டல் நடத்துவது.

ஒரு ஹோட்டலில் இப்படி அறிவிப்புப் பலகை இருந்ததாம்:

"பிராமணர் கள் சாப்பிடும் இடம்"

இது தவறாகப் பதம் பிரித்ததால் வந்த விபரீதம்.

"பிராமணர்கள் சாப்பிடும் இடம்" என்று இருக்க வேண்டும்.

அதுசரி!இன்றைய தேதியில் வகுப்பு வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் கள், சாராயம்  சாப்பிடுகிறார்களே என்று என்ன‌வர் முணுமுணுக்கிறார்.
என்ன செய்வது? கலிகாலம்.

"அம்பிகா காபி ஸ்டோர்" என்ற போர்டை, குசும்பாக,அந்தக் கடை முன்பே போய் நின்று கொண்டு,

"அம்பி காகா பீ!"என்று உரக்கப் படித்து, அந்தக் கடைக்காரர் இதை கவனித்து,அப்படி படித்த சிறுவர்களைப் பிடிக்க ஓடி வந்தாராம். அவரிடம் இருந்து தப்பிக்க குதியங்கால் பிடரியில் பட ஓடி வந்தார்களாம் அந்தச் சிறுவர்கள்.

அந்தச் சிறுவர்களில் ஒருவர் என்னவர். மற்றவர் யார் என்பதை அவருடைய அனுமதி யில்லாமல் சொல்லக் கூடாது.

எல்லாம் தமாஷுக்காக எழுதப்பட்டது. யாரும் வேறு விதமாக நினைத்து சண்டைக்கு வராதீர்கள்.

Sunday 24 April 2011

மனம் அது செம்மையானால்........????


என் அகத்துக்காரர் கொஞ்சம் செயலூக்கம் அதீதமாகப் பெற்றவர்.Hyperactive.!!

பொதுத் தொண்டு செய்கிறேன் என்று வீட்டைப் புறக்கணித்து விடுவார்.அவ்வப் போது அவரை நடைமுறை வாழ்க்கைக்கு இழுப்பதும் என் வேலை ஆகிப் போனது.

இவர் செய்யும் நற்செயலால் பலருக்கும் நன்மை ஏற்பட்டாலும்,ஒரு சிலர் பாதிப்பும் அடையக்கூடும், அப்படி பாதிப்புக்குள்ளனவர்கள் இவருக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்று யூகிக்க‌க் கூட‌ மாட்டார்.

எடுத்துக்காட்டாக,இவர் ஒரு மாலை நேர இலவச‌ மருந்தகம் நடத்தினால் உடனடி பாதிப்பு அந்தப் பகுதியில் கிளினிக் வைத்துள்ள மருத்துவர், மருந்துக்கடை ஆகியவர்களுக்கு வருமான இழப்பு. அவர்கள் இவருடைய நற்செயலை அழிக்கத் திட்டம் போடுவர்.இது தெரியாமல், 'எங்கேயோ இடிக்கிறதே' என்று வீட்டில் வந்து புலம்புவார்.நான் புலன் ஆய்வு செய்து இவ‌ருக்குச் சொல்ல வேண்டும்.

"ஒன்றே செய் அதையும் நன்றே செய்!" என்று அடிக்கடி கூறுவார்.அதற்காக ஒரு செயல் கிடைத்துவிட்டால் அந்தச் சிந்தனையில் முழுமையாக ஆழ்ந்து, தினசரி நடைமுறையான குளித்தல், உண்ணுதல், உறங்குதல், வழிபாடு
எல்லாவற்றையும் துறந்து 'கொக்குக்கு ஒன்றே மதி' என்பது போல பித்தனைப் போல ஆகிவிடுவார்.

ஒரு சமயம், அவரிடம் கேட்டேன்:"என்ன, ஒரு சுவாமி நமஸ்காரம் கூடச் செய்யாமல் அப்படிப் பொதுத் தொண்டு?"

அவருடைய பதில் ஒரு பாடலாக வந்தது:

"மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்
 மனமது செம்மையானால் வாசியைக் கட்ட வேண்டாம்
 மனமது செம்மையானால் பூசனைகள் புரிய வேண்டாம்
 மனமது செம்மையானால் மரணத்தை வெல்ல லாமே"

"இது யார் பாடல்?"

"திருமூலர் பாடல் என்று தோன்றுகிறது"

"அந்தப் பாடலில் நான்கு முறை 'ஆனால், ஆனால்' என்று வருகிறதே; அதைப் பற்றிச் சிந்தித்தீர்களா?"

"சிந்திக்கவில்லை. நீதான் என்ன என்று விளக்கேன்"

"அது ஒரு BIG IF !அந்தப் பாடலையே நான் மாற்றிச் சொல்கிறேன் பாருங்கள்.அப்போது சரியான பொருள் விளங்கும். இலக்கணத்தைப் பார்க்காதீர்கள்"

"சரி சொல்லு தாயே!"

"மனமது செம்மையுறாதோன் மந்திரம் செபிக்க வேண்டும்
 மனமது செம்மையுறாதோன் வாசியைக் கட்ட வேண்டும்
 மனமது செம்மையுறாதோன் பூசனைகள் புரிய வேண்டும்
 மனமது செம்மையுறாதோன் மரணத்தை வெல்லல்அரிது"

"நீ சொல்வதுதான் சரியான பொருள்.ஏற்றுக் கொண்டு இனி ஒழுக்கத்திற்கு வருகிறேன்"

வேதாளம் அடுத்த முருங்கை மரத்தில் ஏறும் வரை இது தாங்கும்!


Saturday 23 April 2011

Wedding Day


இன்று என் திருமண நாள்.37வது திருமண நாள்.36 வருடங்கள் முடிந்து 37வது வருடம் துவங்குகிறது.காலம் ஓடியதே தெரியவில்லை.20வயது முடிந்த‌  பெண்ணாகத் திருமணம் முடித்து பிறந்து வளர்ந்த சென்னைச் சூழலைத் துறந்து
சிறிய நகரத்திகுக் குடி ஏறியது, ஏதோ நேற்று நடந்தது போல உள்ளது.

நான் +1 முடித்து, இடைநிலை ஆசிரியப் பயிற்சி முடித்துவிட்டு, சென்னையில் ஒரு பள்ளியில் மிகவும் சொற்ப சம்பளத்தில் பணி ஆற்றினேன்.திருமணம் ஆகிவிட்டதால், இருந்த வேலையையும் விட்டு விட்டுப் புலம் பெயர்ந்து வந்தாகிவிட்டது.

1975 முதல் 1984 அக்டொப‌ர் மாதம் வரை சும்மா வீட்டுக் குடித்தனம் தான். சமையல் சாப்பாடு,வராந்திர மாதாந்திர பத்திரிகை வாசிப்பு(தொலைக்காட்சி பரவாத சமயம்; எனவே சீரியல் கிடையாது;அதனால் பத்திரிகை படிக்கும் வழக்கம் உண்டு) கணவருக்கு எடுபிடி வேலை, வீடு தோட்டம் பராமரிப்பு, சமயத்தில் தோபி வேலை, சுகாதாரப்பணியாளர் வேலை என்று ஒரு நடுத்தரக் குடும்ப மனையாட்டியாகவே மாறிவிட்டேன். வாழ்க்கையில் எந்த'சேலஞ்சு'ம் இல்லை.அப்படியேதான் இறுதிவரை இருக்கும் என்றே எண்ணியிருந்தேன்.
ஆனால் காலம் என்னை மாற்றிவிட்டது.

1976,1979,1982 ஆகிய மூன்று வருடங்களில் பிரசவம் நடந்து மூன்று பெண் குழ‌ந்தைகளுக்குத் தாய் ஆனேன்.அவர்களுடைய வளர்ப்பு, படிப்பு என்று நேரம்
பற்றவில்லை.

1977 ஜூன் 6ந்தேதி தனிக்குடித்தனம் போனோம்.இதன் நடுவில் 1977 ஜனவரி 26 அனறு என் பெரிய மைத்துனர் மறைவு.1980ல் அந்த பெரிய ஓர்படியாரும் மறைவு. அவர்களுடைய 3 குழந்தைகளுக்கும் பொறுப்பு என்று பலசூழல்கள்.

அந்தக் காலகட்டத்தில் பல குழப்பங்கள் ஏற்பட்டாலும், இரண்டு ஆக்கங்கள் நிகழ்ந்தன.

நாங்கள் குடிபோன கட்டிய வீட்டைக் கிரயம் பேசி வாங்கி விட்டோம். அந்த வீட்டிலேயே 1977 முதல் 2011 வரை இருந்தோம். 1997ல் மாடியைக் கட்டினோம்.

இரண்டாவது ஆக்கம் நான் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் இடைநிலை ஆசிரியைஆக 14 அக்டோபெர் 1984ல் பணி நியமன உத்திரவு பெற்றேன்.
1 ஏப்ரில் 2010வரை பணி செய்து ஓய்வு பெற்றேன்.

வேலைக்குப் போனதால் என் 3 பெண்களையும் நன்கு படிக்க வைக்கவும், திருமணம் செய்யவும் ஏதுவாகியது.

வேலையில் சேர்ந்த பின்னர் +2 முடித்து, பி எஸ்ஸி முடித்து, பி எட் முடித்து
எம் எட் முடித்துப் பட்டம் பெற்றேன். அந்தத் தேர்வுகள் எழுதும் சமயம் என் வீட்டுக் கட‌மையோ, பள்ளிக் கடமையோ எதுவும் குறைவு படாமல் பார்த்துக்கொண்டேன்.நான் படிக்கத் துவங்கு முன்னரே,

"படிக்கிறாய் என்பதால் உன்னுடைய தினசரி நடைமுறை எதுவும் மாறக்கூடாது.எல்லாக்கடமையையும் ஆற்றிக் கொண்டே அதற்கும் மேல் நேரம் ஒதுக்கிப் படிக்க முடிந்தால் படி.நாங்கள் ஒத்துழைக்கவில்லை என்று குறை சொல்லக்கூடாது."

என்று கணவரும் ,மாமியாரும் நிபந்தனை விதித்தார்கள். ஓரளவு யாருக்கும் எந்தத் தொந்திரவும் இல்லாமல் படித்து முடித்தேன். அந்தத் திருப்தி மனதுக்கு ஆறுதலாக உள்ளது.

இந்த வாழ்க்கையில் பல ஏற்றத் தாழ்வுகள். மகிழ்ச்சியும், சோகமும்.குணமும் கோபமும்; நல்லதும் கெட்டதும்;நட்பும் பகையும் என்ற இரட்டைகளைப் பார்த்தாயிற்று.

ஆனாலும் நாமும் ஏதோ சாதித்து இருக்கிறோம் என்ற உள்ள‌ நிறைவு உள்ளது.

எல்லாம் நம்மை ஆட்டுவிக்கும் 'அவனா'ல் அல்லவோ நடக்கிற்து.

அந்த ஆண்டவருக்கு நன்றி!








ஓம் ஸ்ரீகணேசாய நம:


நமது வலைப் பூவை பிள்ளையார் வணக்க‌த்துடன் துவங்குவோம்!

பிள்ளையார்ப்பட்டி என்றாலே செட்டிநாட்டுக் கோவிலையே எல்லோரும் அறிவோம்.ஆனால் தஞ்சையை அடுத்து ஒரு பிள்ளையார்ப்பட்டி உள்ளது.

அங்குள்ள பிள்ளையார் பெரிய திருமேனி.ஓர் ஐந்தரை அடி உள்ள‌ நபர் பிள்ளையார் பின்னால் நின்று கைகளைத் தூக்கினால் அந்த நபரின் உருவம் தெரியாது. அந்த அளவு உருவம் பெரியது.

பெரியகோவில் நந்திக்கு இணையாக வைக்க இந்தப் பிள்ளையார் எடுத்துச் செல்லப்பட்டதாகவும், வழியில் அச்சு முறிந்து சாலையிலேயே அமர்ந்து விட்டதாகவும், பின்னர் அங்கிருந்து நகர்த்த‌ முடியவில்லை என்றும் அதனால் சாலை மீதே சிறிய கோவில் அமைக்கப்பட்டதாகவும் செவி வழிச்செய்தி கூறுகிறது.சாலை மீது கோவில் இருப்பதை உணர முடிகிற்து.ஏனெனில் அந்த இடத்தில் சாலை நனகு வளைந்து போகிறது.நாம் கேட்கும் செய்தி உண்மையானால் கோவில் 1000 வருடப் பாரம்பரியம் உள்ளதாகும்.

சிலை செய்யும் போதே பாரதம் எழுத முறிந்த கொம்பு விநாயகர் கையில் உள்ளது போல முறையாகச் செய்யப்பட்டுள்ளது.ஆனால் நன்கு இருக்க வேண்டிய மற்றொரு கொம்பும் முறிந்த நிலையில் காண்கிறது.இது சமீபகாலத்தில் அபிஷேகம் செய்யும் போது குடம் விழுந்து முறிந்துவிட்டதாம். அதன் பின்னர் நீண்ட காலம் பின்னம் அடைந்த விக்ரஹம் என்று பயந்து வழிபாடே நின்று போய் உள்ளது.

சமீபமாக கும்பாபிஷேகம் ஆகி, முன் மண்டபம் எல்லாம் கட்டப்பட்டு அழகுற‌ விளங்குகிறது கோவில்.

தஞ்சை=வல்லம் சாலையில் மருத்துவக்கல்லுரி,தென்னகப்பண்பாட்டு மையம் தாண்டியவுடன்,வல்லம் வருமுன்னரே சாலையின் மீதே உள்ளது இக்கோவில்.
முடிந்தால் ஒருமுறை தரிசியுங்கள்.

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்திமகன் தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே!

வித்தக விநாயக விரைகழல் சரணே!!!!!