Tuesday, 3 May 2011

முறுக்கிக் கொள்ளலாமா...?


முறுக்கிக் கொள்ளலாமா...?


பேருந்தில் அமர்ந்திருந்த போது ஒரு வயசாளி கைநிறைய‌ முறுக்குப் பொட்ட்லங்களை வைத்துக் கொண்டு "முறுக்...முறுக்... "என்று கூவிக் கொண்டு போனார்.

அப்போ முறுக்கைப் பற்றி பல சிந்தனைகள் ஓடின‌.

இவரைப் பல தடவை கேட்டும் முறுக்குச் செயின் வாங்கித் தரவில்லை. ஓய்வு பெற்ற பின்னர், ஏதொ விடுப‌ட்ட சம்பளம் வந்த‌து. அந்த 'அரியர்' வந்த அன்று  ஒரு நாள் 'வாவா கடைக்குப் போவோம்'என்றுஅவசரப்படுத்தினார்.
ஒன்றும் சொல்லாமல் கூட்டிப்போய் தாலிக்கொடி,கயிறு முறுக்கின மாதிரி, வாங்கிக் கொடுத்தார்.

மாப்பிள்ளை முறுக்கு என்று ஒரு பதம் உண்டு. வேற்றகமான, மாமனார் வீட்டுகுப் போகும் போது தன் மகனுக்குத் தவறாமல் அம்மா சொல்லி அனுப்பவது

"அங்க போயி அசடாட்டம் வழியாதே.முறுக்கா இருந்துக்கோ"

வேறு எதில் கேட்கிறார்களோ இல்லையோ இந்த விஷயத்தை அம்மா சொற்படி கேட்டு விடுவார்கள் புது மாப்பிள்ளைகள்.மாம‌னார், மாமியார், மைத்துனனிடம் லேசில் வாய்விட்டுப் பேசி விட மாட்டார்க‌ள்.(குட்டி மைத்துனி இருந்தால் மட்டும் கொஞ்சம் முறுக்குத் தளரும்)

எங்க‌ள் ஊரில் ஒரு மைனர் இருந்தார்.முறுக்கு மீசை வைத்து இருப்பார். ஒரு நாளைக்கு 150 கிராம் வெண்ணைய் தடவி மீசையை நல்ல கூர்ப்பாக முறுக்கி விட்டிருப்பார்.அவர் பேரே முறுக்கு மீசை மைனர்தான்.

கோபத்தில் பேசாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு போகிறவர்களை
'முறுக்கிக்கொண்டு போனார்' என்று சொல்வது உண்டு.

முறுக்கு என்றாலே மணப்பாறைதான். உண்மையில் மணப்பாறைக்காரர்கள் அந்தத் தொழிலை ஆரம்பிக்கவில்லையாம்.பஞ்சம் பிழைக்க வந்த யாரோ ஒரு தென் மாவட்டக்காரர் ஆரம்பித்த‌தாம் அந்தத் தொழில். இன்று அந்தக் குடும்பத்தார் யாரும் அங்கே இல்லையாம். ஆனால் பலருக்கும் அது இன்று பிழைப்பாகிவிட்டது.

மிகவும் வேலை வாங்கினால் முறுக்குப் பிழிவது போல பிழிந்து விடுவார்கள் என்று சொல்வதுண்டு.

சினிமா தியேட்டரில் விற்பதற்கு என்றே ஒரு வகை முறுக்கு உண்டு. அந்த சுவையே தனி. அதுவும் ஓசியில் யாராவது வாங்கி கொடுத்தால் கூடுதலாக எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.இடை வேளைக்குப் பின்னர் படம் ஆரம்பித்த பின்னர் 'கடமுட' என்று கடித்து அக்கம் பக்கத்தில் அமர்ந்து இருப்பவர்களுக்குக் கடுப்பை கிளப்பலாம்.

கல்யாணச் சீர் முறுக்கு 5, 7. 9 என்று சுற்றுக்கள் பெரிய அளவில் செய்வார்கள்.அதில் வித வித மான வேலப்பாடுகள் எல்லாம் செய்து அசத்துவார்கள்.சாந்தி முகூர்த்தத்தில் வைப்பதற்கென்றே சில வகை டிசைன் எல்லாம் உண்டு.

என் பெரிய மைத்துனர் முறுக்கு விள்ளும் போதோ கடிக்கும் போதோ சத்தம் வரக்கூடாது என்பார். அப்படி சத்தம் வந்தால் கடுப்படிப்பார். அவர் மட்டும் எப்படியோ சத்தம் வராமல் முறுக்கு சாப்பிடுவார்.நம்மால் முடியாது.

நான் திருமணமாகி வந்த புதிதில் முதல் கோகுலாஷ்டமிக்கு முறுக்கு சுற்ற என் மாமியார் மாவைத் தயார் செய்து விட்டு, 'கையால் சுற்று' என்று கட்டளையிட்டார்கள்.நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவள்.  ஒரு முறை கூட கை முறுக்குச் சுற்றியதில்லை.மாமியாரிடம் முறுக்குச் சுற்றத் தெரியாது
 என்று சொல்லக் கூச்சம். துணிந்து ரொம்பத் தெரிந்தது போல சுற்ற ஆரம்பித்தேன்.அன்று கருமாரித்தாய் என்னுடன் இருந்து இருக்கிறாள்.என்ன ஆச்சரியம்! விள்ளாமல் விரியாமல் 10 பெருக்குத் தரும் அளவில் முறுக்கைத் தங்கு தடை இல்லாமல் சுற்றிக் கொடுத்தேன். மாமியார் எண்ணையில் போட்டுக் எடுத்தார்கள்.

என்னை அதட்டி வேலை வாங்கிய என் மாமியாருக்கு முறுக்குச் சுற்ற வராதாம்.கடைசி காலம் வரை அப்படிதான்.கை முறுக்கு மேல் ஆசை வந்த போதெல்லாம் நான் சுற்ற அவர்கள் வெந்து எடுப்பார்கள்.

இந்தப்பதிவு எப்படின்னு முறுக்கிக் கொள்ளாமல் சொல்லுங்கள்.நன்றி.

5 comments:

  1. ////மாப்பிள்ளை முறுக்கு என்று ஒரு பதம் உண்டு. வேற்றகமான, மாமனார் வீட்டுகுப் போகும் போது தன் மகனுக்குத் தவறாமல் அம்மா சொல்லி அனுப்பவது

    "அங்க போயி அசடாட்டம் வழியாதே.முறுக்கா இருந்துக்கோ"

    வேறு எதில் கேட்கிறார்களோ இல்லையோ இந்த விஷயத்தை அம்மா சொற்படி கேட்டு விடுவார்கள் புது மாப்பிள்ளைகள்.மாம‌னார், மாமியார், மைத்துனனிடம் லேசில் வாய்விட்டுப் பேசி விட மாட்டார்க‌ள்.(குட்டி மைத்துனி இருந்தால் மட்டும் கொஞ்சம் முறுக்குத் தளரும்)////

    /////என்னை அதட்டி வேலை வாங்கிய என் மாமியாருக்கு முறுக்குச் சுற்ற வராதாம்.கடைசி காலம் வரை அப்படிதான்.கை முறுக்கு மேல் ஆசை வந்த போதெல்லாம் நான் சுற்ற அவர்கள் வெந்து எடுப்பார்கள்./////

    முறுக்கு, விறைப்பு, பிகு, கிராக்கி... என்ற சில வார்த்தைகளையும் அதன் பொருள் கொள்ளலாம்...
    அனுபவமும், ஆதங்கமும் என்றாலும் கூட அதைக் கூறும் தொனி சுவாரஸ்யம் தருகிறது.....

    ReplyDelete
  2. வணக்கம் மாமி,

    நான் வடைகளில் பல்வேறு வகையான வடைகளை கேள்விப் பட்டிருக்கிறேன்.

    ஆமை வடை, உளுந்து வடை, பருப்பு வடை, மசால் வடை, மெது வடை - இப்படி ..

    ஆனால் இன்னிக்குத்தான் முறுக்குகளோட வகையை தெரிஞ்சிக்கிட்டேன்...

    முறுக்குச் செயின்
    மாப்பிள்ளை முறுக்கு
    முறுக்கு மீசை
    கல்யாணச் சீர் முறுக்கு
    சினிமா தியேட்டர் முறுக்கு
    கை முறுக்கு

    சரி சரி .. நீங்க இப்படியெல்லாம் முறுக்கு முறுக்கு னு எழுதிப்பூட்டிக..

    பாருங்க இன்னிக்கு முறுக்கு தின்னே ஆகனும் னு தோனுது ..

    எங்க ஆத்துக்காரி கிட்டே கேட்டா - அவாளும் முறுக்கிக்கிரா ?

    போகட்டும் ..
    இன்னிக்கு எங்கேயாவது ஒரு கடையிலே போய் முறுக்கிட வேண்டியது தான்.

    நல்ல முறுக்கான பதிவு ...
    தொடர்ந்து முறுக்குங்க .. சே !
    தொடர்ந்து எழுதுங்க...

    ReplyDelete
  3. ///"...அதைக் கூறும் தொனி சுவாரஸ்யம் தருகிறது....."///

    நன்றி ஆலாசியம் அவர்களே. உங்க‌ள் பாராட்டுத்தான் எழுதத் தூண்டுகிறது.

    ReplyDelete
  4. ///"நல்ல முறுக்கான பதிவு ...தொடர்ந்து முறுக்குங்க .. சே !தொடர்ந்து எழுதுங்க..."///

    நன்றி ஜானகிராமன்.தினசரி 50 பேருக்குமேல் வாசிக்கிறார்கள். ஆனால் பின்னூட்டம் இட்டு உற்சாகப்படுத்துவது உஙளைப் போல ஒரு சிலர்தான்.

    ReplyDelete
  5. //தினசரி 50 பேருக்குமேல் வாசிக்கிறார்கள். ஆனால் பின்னூட்டம் இட்டு உற்சாகப்படுத்துவது உஙளைப் போல ஒரு சிலர்தான்.//

    உண்மைதான் அம்மா,

    இன்றைய காலச் சூழலில் அன்பர்கள் வலைத்தளத்தை பார்வையிடுவதே பெரிய வேலை இல்லையா ?
    அவர்களுடைய வேலைப் பளுவால் அவர்களால் பின் ஊட்டமிட முடிவதில்லை என்பதே சரியாகும்.

    தினமும் 50 பேர் நமது வலைத்தளத்திற்கு வருவதே பெரிய வெற்றியல்லவா ? - நமது வலைத்தளம் பிடித்திருப்பதால் தானே வருகை தருகிறார்கள் ?

    எனவே முகம் தெரியாவிட்டாலும் அவர்களுக்கு நன்றி பாராட்டுவோம் ...

    மேலும் பின் ஊட்டங்களைப் பற்றி கருதாமல் தொடர்ந்து எழுதுவோம் ..

    ( இக் கருத்துகள் யாவும் எமது சிவயசிவ - விற்கும் பொருந்தும் )


    உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ ?

    மேலும் குருவருளும் + திருவருளும் நமக்கு துணை செய்யட்டும் ..

    சிவயசிவ.

    ReplyDelete