Monday, 2 May 2011

நீயா..?.....நானா?....




ஒரு ஊரில் மாமியாரும் மருமகளும் "ஒற்றுமையாக" ஒரே வீட்டில் வாழ்ந்தார்கள்

ஒரு நாள் ஒரு பிச்சைக்காரர் வீட்டு வாயில் முன் வந்து நின்றார்.

"அம்மா!தாயே! பிச்சை போடுங்கள்!"

மருமகள் முன் தாழ்வாரத்தில் இருந்தார்.அதனால் பிச்சைக்காரரிடம்,

"போ!போ! பிச்சை இல்லை போ! போ!" என்றாள்.

மாமியார்காரி முன்றாம் கட்டில் இருந்தவள் ஏதோ வாயிலில் பேச்சுக்குர‌ல் கேட்கிறதே என்று எட்டிப் பார்த்தாள். பிச்சைக்காரர் விலகிச் செல்வது தெரிந்தது.உடனே விடு விடு என்று வாயிலுக்கு வந்தாள்.

அதற்குள் பிச்சைக்காரர் இரண்டு வீடு தள்ளிப் போய் விட்டார்.

"ஓய்! பிச்சைக்காரரே! இங்கே வாரும்!" என்று கூப்பிடாள் மாமியாரம்மா!

பிச்சைக்காரருக்கு ஒரே மகிழ்ச்சி!'ஆகா,போகச் சொன்ன வீட்டில் மீண்டும் கூப்பிடுகிறார்களே!எதோ கிடைக்கப்போகிறது' என்று ஆவலோடு ஓடிவந்தார்.

மாமியார்காரி கேட்டாள்:"என் மருமகள் உன்னிடம் என்ன சொன்னாள்?"

"போ,போ பிச்சை இல்லை என்று சொன்னார்கள்!"

"அதெப்படி அவ சொல்லலாம்!? நான் ஒருத்தி இங்கே இருப்பது கண்ணுக்குத் தெரியலையா?நான்தான் இந்த வீட்டுக்கு எஜமானி.  இப்ப நான் சொல்றேன் கேட்டுக்க!"

"சரி! கேட்டுக்கறேன் சொல்லுங்க!"

"போ!போ!பிச்சை இல்லை போ!போ!" என்றாளாம் மாமியார்காரி!

பிச்சைக்காரர் தன் விதியை நொந்து கொண்டு போனாராம்.

ஏன் இந்தக் கதை என்கிறீர்களா?

இப்படி ஒன்று அண்மையில் நடந்துள்ளது. எங்கேயா?

எல்லாம் நமது(அ)தர்மமிகு சென்னையில் தான்.

பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே மாதம் 14ல் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அறிக்கை விட்டார்கள்.

ஆண்டு தோறும் இந்த அறிவிப்பைக் கல்வி அமைச்சர்தான் செய்வாராம்.

இந்தஆண்டு என்னமோ இயக்குனர் அறிவித்துவிட்டார்கள்.

வந்ததே அமைச்சருக்குக் கோவம்!அவர் ஒரு அறிக்கை விட்டார்:"தேர்வு முடிவுகள் 9 ஆம் தேதியே வெளியிடப்படும்"

செய்தி இறக்கைகட்டிப்பறந்து போய் முதல்வரின் காதில் விழுந்தது.

"இது அமைச்சருக்கும் இயக்குனருக்கும் உள்ள கருத்து வேறுபாடு"
 என்றார் முதல்வர்.

அமைச்சருக்கும் இயக்குனருக்கும் நடுவில் சரியான 'கெமிஸ்டிரி'இல்லை போல!ஏன் ஃபிஸிக்ஸ், மேத்ஸ், பயாலஜி, ஹிஸ்டரி, எதுவுமே இல்லை என்று தோன்றுகிறது.(கல்வி அமைச்சக விஷயமா...?அதான் இப்படி.. ஹி.. ஹி..)

போகட்டும், விடுங்கள்! சும்மா கொஞ்சம் தமாஷ்!

நான் சொல்ல வந்த விஷயம் என்னென்னா 'மகளிர் அணி எல்லாவற்றிலும் முன்னால வந்து கிட்டு இருக்கு!'

இந்த ஆண்டு +2 எழுதியதில் பெண்கள் 50000 பேர் ஆண்களை விட அதிகமாக எழுதியுள்ளார்கள்.

பெண் தேர்வர்கள் எண்ணிக்கை=3,87,102
ஆண் தேர்வர்கள் எண்ணிக்கை=3,36,443
                                                              ==========      
பெண்கள் கூடுதலாக உள்ளது= 50659
                                                              ==========  
இது போலவே 10 ஆம் வகுப்புத் தேர்விலும் பெண்கள் 14000 பேர் கூடுதலாக எழுதியுள்ளார்கள்.

2020ல் வல்லரசுக் கனவு சாத்தியம் போல்தான் தெரிகிறது.பெண்கள் முன்னணிக்கு வந்து விட்டால் அது நல்லரசாகவும் அமையும்.

ஓர் ஆண் கல்வி கற்றால் அது அவனை மட்டுமே முன்னேற்றும். ஆனால் ஒரு பெண் கல்வி கற்றால் அந்தக் குடும்பத்திற்கே கல்வி கொடுத்தது போல என்பார்கள்.

இதைக்காண மஹாகவி பாரதி இன்று இல்லையே!

"ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே!" 


2 comments:

  1. பிச்சைக்காரனுக்கு இல்லை என்பதை மாமியார் சொன்ன கதை இருக்கட்டும். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிவிப்பதில் நீ பெரியவனா நான் பெரியவனா என்ற ஈகோ இருக்கட்டும், மற்றொரு கேலிக்குரிய செயல்பட்டை நீங்கள் கவனிக்கவில்லையா. பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் 1956இல் நான் சென்னை பப்ளிக் செர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதினேன். ஓரிரு மாதங்கள் கழித்து பதிவு தபாலில் என்னுடைய சான்றிதழ்கள் திரும்பி வந்தன. மறு நாள் பதிவுத் தபாலில், எனக்கு போலீஸ் துறைக்கு அலாட் செய்து ஒரு கடிதம், மறுபடி ஒரு வாரம் கழித்து, மத்திய மண்டல டி.ஐ.ஜி. அலுவலகத்திலிருந்து என்னை திருச்சி ரயில்வே போலீஸ் அலுவலகத்துக்கு போஸ்ட் செய்திருப்பதாக ஒரு கடிதம், கடைசியாக ரயில்வே போலீஸ் சுப்பிரெண்டெண்ட் அலுவலகத்திலிருந்து பணி நியமன கடிதம் வந்தது. நான் போய் வேலைக்குச் சேர்ந்தேன். இடையில் யாரும் என்னை அழைக்கவில்லை, வேலைக்கு ஆர்டர் நேரில் தரவில்லை. இப்போதெல்லாம், கிளாஸ் 4, கடை நிலை ஊழியர் வேலைக்குக்கூட முதலமைச்சர் அல்லது துணை முதலமைச்சர் அலுவலகத்தில் வரிசையில் நின்று அவர்கள் பணி நியமனம் கொடுக்க, வாங்கிக் கொள்வோர் முகமெல்லாம் பல்லாக மகிழ்ந்து வாங்கிக்கொள்ள, யார் இட்ட பிச்சை என சிந்திக்க வைக்கிறது. எல்லாம் விளம்பர காலம். என்ன செய்வது?

    ReplyDelete
  2. அமைச்சருக்கும் இயக்குனருக்கும் நடுவில் சரியான 'கெமிஸ்டிரி'இல்லை போல!ஏன் ஃபிஸிக்ஸ், மேத்ஸ், பயாலஜி, ஹிஸ்டரி, எதுவுமே இல்லை என்று தோன்றுகிறது.(கல்வி அமைச்சக விஷயமா...?அதான் இப்படி.. ஹி.. ஹி..)

    நகைச்சுவையால் மண்டையிலே நச் - னு அரசாங்கத்துக்கு போட்டிருக்கீக ..

    வெரிகுட் கீப் இட் அப் ...

    ReplyDelete