Sunday 22 May 2011

தூய அன்னை ஸ்ரீசாரதாமணி அம்மையார்


தூய அன்னை ஸ்ரீசாரதாமணி அம்மையார் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு ஏற்ற மனைவி மட்டும் அல்ல;பரமஹம்சரின் முதல் சீடரும் ஆவார்.

அன்னையைப்பற்றி ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்லும் போது நெகிழ்ந்து விடுவார்.

"அன்னை மட்டும் சாதாரணப் பெண்களைப் போல உலகப்பொருட்களுக்காக என்னை நச்சரித்து இருந்தால் இந்த ராமகிருஷ்ணன் உங்க‌ளுக்குக் கிடைத்திருக்க மாட்டான்.இவனும் ஒரு பணம் சமாபதிக்கும் யந்திரம்போல ஆகி, ஒன்றுக்கும் உதவாதவனாகப் போயிருப்பான்.அன்னையின் தியாகமே என்னை மனித நிலையில் இருந்து தெய்வத்தை நோக்கி உயர்த்தியது" என்பார் குருதேவர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் முதலில் 6 வயதே ஆன குழந்தை சாரதையை மணந்து கொண்டார்.அன்னை பூப்பெய்தி அவரிடம் வந்து சேர்வதற்குள் ச‌ன்னியாசத்தை
ஏற்றுக் கொண்டுவிட்டார்.

"நான் சன்னியாசத்தைக் கைவிட்டு உன்னுடன் சாதாரணக் கணவன் போல வாழட்டுமா? அப்போது நமக்கு ஒரு சில குழந்தைகளே இருக்கும். ஆனால் நாம் ஆன்மீகத்தில் ஈடுப‌ட்டு நம‌க்கென்று குழந்தை குட்டிகளைப் பெறாமல் இருப்போமாயின், இந்த உலகமே நம்மை தாய் தந்தையாக ஏற்றுப் போற்றும்.
எது வேண்டும் சொல்லுங்கள் தாயே!"என்றார் பரமஹம்சர்.

அன்னை சற்றும் தயங்காமல், "நான் லோக மாதாவாகவே இருக்க விரும்புகிறேன்" என்றார்.இதைச்சொல்லும் போது அன்னைக்கு 15,16 வயது இருக்கலாம்.

"அவள் மட்டும் என்னைத் தூண்டுவது போல நடந்திருந்தால், என் சன்னியாசம் எல்லாம் வெறும் கேலிக் கூத்தாக ஆகியிருக்கும்" என்பார் பரமஹம்சர்.

அவ்ர்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது.

தன்னுடன் எந்த இடத்திற்கு அன்னை வரலாம், வரக்கூடாது என்பதினைப் பரமஹம்சர் சொல்லும் சொற்களை வைத்தே அன்னை புரிந்து கொள்வாராம்

"நீங்களும் என்னுடன் வாருங்கள்" என்று பரமஹம்சர் சொன்னால் அதனை
அன்னை ஏற்று அவருடன் செல்வாராம்.

"என்ன, நீங்களும் எங்களுடன் வருகிறீர்கள்தானே?" என்று பரமஹம்சர் கேட்டால் அன்னை குருதேவர் தான் வருவதை விரும்பவில்லை என்பதைப்புரிந்து கொண்டு விலகிவிடுவாராம்.

துறவியர்களுக்குத் துறவியாக வாழ்ந்து காண்பித்தார்கள்.

கிரஹஸ்தர்களுக்கு இல்லற‌த்தாரைப் போலவே வாழ்ந்து காண்பித்தார்கள்.

இந்த உன்னத தம்பதிகளின் பாதம் பணிவோம்.

3 comments:

  1. வலைப் பூ ஆசிரியருக்கு வணக்கம்.

    இல்லறத்தில் துறவறம் என்று சொல்வார்கள்.ஆனால் துறவறத்தில் இல்லறம் நடத்திய இனிய தம்பதிகள் இவர்கள்தான் என்பதை அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.

    இன்னும் சற்று விரிவான செய்திகளைத் தந்தால் எம்மைப் போன்றோருக்கு நலம் பயக்கும்.

    நன்றி.

    ReplyDelete
  2. தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி கங்காதரன் ஐயா!ப‌ல வலைதளங்கள் சினிமா, அரசியல், பாலுணர்வு தொடர்புடைய செய்திகளை வெளியிட்டு தங்களுடைய வருகைப் பதிவை அதிகரித்து வருகின்றன.நாம் இங்கு சிறிது கடினமான செய்திகளைச் சொல்கிறோம். மிக நீளமாக எழுதினால் வந்து வாசிக்கும் 50 பேரும் விலகி விடுவார்களோ என்று ஐயப்பட்டு, குட்டி குட்டியாக செய்தியைக்கொடுக்க விழைகிறேன்.
    இருப்பினும் உங்கள் ஆலோசனையை ஏற்று இன்னும் சிறிது விளக்கமாக எழுத முயல்கிறேன்.

    ReplyDelete
  3. வணக்கம் மாமி,

    அன்னை பின்பற்றிய இத்தொடரை சிந்தித்தாலே அவரது மேன்மை புலப்படும்..

    "நீங்களும் என்னுடன் வாருங்கள்"
    "என்ன, நீங்களும் எங்களுடன் வருகிறீர்கள்தானே?

    இன்று நம் வீட்டிலெல்லாம் இது எடுபடுமா ?

    அற்புதம் அவர்களது அருள் வாழ்வு..
    வணங்குவோம்.. போற்றுவோம்..

    ReplyDelete